ஒரு நிமிடத்திற்கு 7,200 டிக்கெட்டுகள் புக்கிங் வசதி அறிமுகம்.. மத்தியஇணையமைச்சர் தகவல்
டெல்லி : பயணிகளின் காத்திருக்கும் நேரத்தைப் குறைக்க ஒரு நிமிடத்திற்கு 7,200 டிக்கெட்டுகள் வரை புக்கிங் செய்யும் அதிநவீன சர்வர்கள் நிறுவப்பட்டுள்ளதாக ரயில்வேத்துறை இணையமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பேசிய அவர், இந்திய ரயில்வே துறையில் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
குறிப்பாக, தட்கல் டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக்கிங் செய்ய அடையாள சான்றுகள் தேவையில்லை என சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆன்லைனில் டிக்கெட்டுகளை புக்கிங் செய்யும் போது ஏமாற்றத்தை தவிர்க்க புதிதாக சக்திவாய்ந்த 5 சர்வர்கள் நிறுவப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, தற்போது ஒரு நிமிடத்திற்கு 7,200 டிக்கெட்டுகள் வரை புக்கிங் செய்ய கூடுதல் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்பு, இ-டிக்கெட்டில் ஒரு நிமிடத்திற்கு 2 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே எடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
இதுதவிர, பயணிகளுக்கு அதிக வசதிகளை வழங்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் 4,615 குடிநீர் வினியோக இயந்திரங்களும் நிறுவப்பட்டுள்ளதாகவும், ரயில்
தாமதமானால் முன்கூட்டியே எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கும் வசதியும் துவங்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே துறை இணையமைச்சர் மனோஜ் சின்ஹா கூறியுள்ளார்.