வட இந்தியாவின் பல மாநிலங்களில், மழை, வெள்ளம்.. பலி எண்ணிக்கை 100ஐ நெருங்குகிறது! ரயில் சேவை பாதிப்பு
Recommended Video
டெல்லி: உத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தால், 4 நாட்களில் 73 பேர் இறந்துள்ளனர், கிழக்கு உத்தரபிரதேசத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வானிலை இலாகா ரெட் அலர்ட் பிறப்பித்துள்ளது.
பீகார் தலைநகர், பாட்னாவில் கடந்த நான்கு நாட்களில் பெய்த கனமழையால், பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, ரயில் மற்றும் சாலை போக்குவரத்து சீர்குலைந்துள்ளது.
பீகார் மாநிலங்களில் பலத்த மழை பெய்ததால், இன்று காலை பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. நேற்று அம்மாநில, முதல்வர் நிதீஷ் குமார் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். செவ்வாய்க்கிழமை வரை அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்திலும் பலத்த மழை பெய்துள்ளது, அங்கு கடந்த சில நாட்களில் மழை தொடர்பான சம்பவங்களில் பலர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் வெள்ளிக்கிழமை இயல்பை விட 3 சதவீதம் அதிக மழை பெய்தது. மாநிலத்தின் கிழக்கு பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று, பிரயாக்ராஜில் 42.5 மி.மீ மழையும், வாரணாசியில் 6.2 மி.மீ மழையும் பெய்தது. இந்த ஆண்டு சராசரி மழையை விட இது மிக அதிகம்.
உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று 26 பேர் உயிரிழந்தனர். அதற்கு முந்தைய 2 நாட்களில், 47 பேர் இறந்தனர். பலத்த மழை காரணமாக லக்னோ, அமேதி, ஹர்தாய் மற்றும் பிற மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
தேவையான அனைத்து பாதுகாப்பு, நடவடிக்கைகளையும் எடுக்குமாறு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மண்டல ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களில் மழையால் 6 பேர் உயிரிழந்தனர். ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள தோப்வாராவில் அரசுப் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் உட்பட 3 பேர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர். சம்பவ இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.