பெங்களூர் அபார்ட்மென்டில் டாக்டர் மனைவி மர்ம மரணம்.. உள்ளாடைக்குள் இருந்த பக்கத்து வீட்டு சாவி
பெங்களூர்: அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த பெங்களூர் டாக்டர் மனைவி தொடர்பான வழக்கில் குழப்பம் நீடிக்கிறது.
பெங்களூர் ஆர்.ஆர். நகரில் உள்ள மந்த்ரி அல்பைன் அப்பார்ட்மென்ட்டில் வசித்து வருபவர் அவினாஷ் அகர்வால்.
இவர் குழந்தைகள் நல டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், சோனா அகர்வாலுக்கும் (25) இரண்டு வருடங்கள் முன்பாக திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு ஒரு கைக்குழந்தை உள்ளது.
உடைக்குள் சாவி, டாலர்கள்
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் சோனா அகர்வால், அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் இருந்து கீழே விழுந்து பலியானார். இந்த வழக்கில் பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்த வண்ணமுள்ளன. சோனா அகர்வால் உடலை பரிசோதனை செய்த போது அவரது உள்ளாடைக்குள் அமெரிக்க டாலர்கள், சில தங்க நகைகள், மற்றும் பக்கத்து வீட்டு சாவி ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை மாலை 505ஆவது என் கொண்ட பக்கத்து வீட்டில் இருந்து அவர் வெளியே வந்ததாக அந்த வீட்டில் குடியிருக்கும் ஷிமோகாவை சேர்ந்த பிரசாத் என்பவரின் மாமனார் தெரிவித்துள்ளார்.
கொலையா, தற்கொலையா
பிரசாத் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தபோதுதான் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். எனவே இது எதேச்சையாக விழுந்ததா, அல்லது தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது சோனா அகர்வால் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன. 501ம் நம்பர் பிளாட்டில் வசித்து வந்தவர் சோனா அகர்வால். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி பூஜையை ஒட்டி பிரசாத்தின் மனைவி சோனாவை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார்.
பெட்ரூமில் முகாம்
அக்கம்பக்கத்து வீட்டு பெண்கள் எல்லோருமே பிரசாத் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது சிலை அமைந்துள்ள ஹால் பகுதியில் அமராமல் பெட்ரூம் பகுதியில் ரொம்ப நேரம் சோனா அகர்வால் அமர்ந்திருந்ததை, அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்கள் கவனித்துள்ளனர். அன்று மாலை முதல் பிரசாத் விட்டு சாவி திடீரென மாயமாகி விட்டது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அந்த குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் மொட்டை மாடியில் கெட்டுகெதர் செய்துள்ளனர்.
திடுக்கிடும் திருப்பம்
ஆனால் இதில், சோனா பங்கேற்கவில்லை. பிரசாத்தின் மாமனார் கெட்டு கெதருக்கு நடுவே திடீரென வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது பிரசாத் வீட்டுக்குள் இருந்து சோனா அகர்வால் வெளியே வந்துள்ளார். இதை பிரதாத் மாமனார் பார்த்துள்ளார். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, சோனா தான் விநாயகர் சதுர்த்தி அன்று பிரசாத் வீட்டு சாவியை திருடியிருக்க வேண்டும். பின்னர் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் சென்று பொருட்களை எடுத்து உள்ளாடையில் வைத்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதை பிரசாத் மாமனார், பார்த்து விட்டதால் பயந்து ஓடும்போது மாடியில் இருந்து தவறி விழுந்தாரா அல்லது அவமானத்தால் தற்கொலை செய்தாரா அல்லது யாராவது தள்ளிவிட்டு கொன்றார்களா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.