சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் அஜிதா உடல் கோழிக்கோட்டில் அடக்கம்!
சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் அஜிதாவின் உடல் கோழிக்கோட்டில் பலத்த பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.
திருவனந்தபுரம்: நீண்ட போராட்டத்திற்கு பிறகு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் அஜிதாவின் உடல் வக்கீல் பகத்சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டு கோழிக்கோட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.
கடந்த நவம்பர் மாதம் 24ம் தேதி தமிழக கேரள எல்லையில் உள்ள நிலம்பூர் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும், கேரளா மாநில அதிரடிப்படை போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 57 வயதுடைய குப்புதேவராஜ் என்பவரும், 40 வயதுடைய அஜிதா என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களுடன் இருந்த மாவோயிஸ்டுகள் தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களை கேரள தண்டர்போல் அதிரடிப்படையினர் தேடி வருகின்றனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட குப்புதேவராஜ் மற்றும் அஜிதா ஆகியோரின் உடல்கள் கைப்பற்றப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோழிக்கோடு மருத்துவக்கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தன. அங்கு அவர்களுடைய உடல்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன. கடந்த 9ம் தேதி குப்புதேவராஜின் உடலை அவருடைய உறவினர்கள் முன்னிலையில் கோழிக்கோடு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
அஜிதாவின் உடல் அவருடைய சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதற்கு அரசுத் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், அஜிதாவின் உடலை அடக்கம் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டது. எனவே, கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரியில் அஜிதாவின் உடல் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், சென்னையை சேர்ந்த வக்கீல் பகத்சிங், அஜிதாவின் உடலை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு, நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாவோயிஸ்டு அஜிதாவின் உடலை பகத்சிங்கிடம் ஒப்படைக்க உத்தரவிட்டனர்.
இதையடுத்து, நேற்று காலை 10 மணியளவில் அஜிதாவின் உடலை வக்கீல் பகத்சிங்கிடம் போலீசார் ஒப்படைத்தனர். அப்போது, உடலை வாங்குவதற்காக கூடி இருந்த மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் போலீசாருக்கு எதிராக உரக்க முழக்கங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அஜிதாவின் உடல் கோழிக்கோடு அருகே உள்ள வெஸ்ட்ஹில் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
குப்புதேவராஜ் மற்றும் அஜிதா ஆகிய இருவரையும் போலீசார் திட்டமிட்டு என்கவுண்டர் என்ற பெயரில் சுட்டுக் கொன்றுள்ளனர் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.