நக்சலைட்டுகளால் கடத்தப்பட்ட துணை ராணுவ படை வீரர் ராகேஷ்வர் சிங் விடுவிப்பு
சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்ட்டரில் நக்சலைட்டுகளால் பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு படை வீரர் ராகேஷ்வர் சிங் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுடன் ஏற்பட்ட சண்டையின் போது கடத்தப்பட்ட துணை ராணுவ படை வீரர் ராகேஷ்வர் சிங் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். ராகேஸ்வர் சிங் குடும்பத்தினரின் வேண்டுகோளினை ஏற்று அவரை நக்சலைட்டுகள் விடுவித்தனர்.
சத்தீஸ்கார் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் கடந்த 3ஆம் தேதி பாதுகாப்பு படையினர் நக்சலைட்டுகளுக்கு எதிராக மாபெரும் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, வனப்பகுதிக்குள் மறைந்திருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால், இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
துப்பாக்கிச்சண்டையில் நக்சலைட்டுகள் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 22 பேர் வீரமரணமடைந்தனர். பலர் படுகாயமடைந்தனர். நக்சலைட்டுகள் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது பாதுகாப்புபடையின் 'கோப்ரா' கமாண்டோ படை பிரிவை சேர்ந்த வீரர் ஒருவர் மாயமானார். அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நக்சலைட்டுகள் தரப்பில் அறிக்கை வெளியானது. அதில் பிஜாப்பூர் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 24 பேர் உயிரிழந்ததாகவும் 31 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், தங்கள் தரப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக நக்சலைட்டுகள் தெரிவித்துள்ளனர். இந்த அறிக்கையில் மாயமான பாதுகாப்பு படைவீரர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக நக்சலைட்டுகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், கடத்தப்பட்ட பாதுகாப்பு படைவீரரின் புகைப்படத்தை நக்சலைட்டுகள் நேற்று வெளியிட்டனர். கடத்தப்பட்ட பாதுகாப்பு படைவீரர் 'கோப்ரா' கமாண்டோ படை பிரிவை சேர்ந்த ராகேஷ்வர் சிங் மன்ஹஸ் என்பது தெரியவந்துள்ளது. கடத்தப்பட்ட பாதுகாப்பு படைவீரர் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவரை துன்புறுத்தமாட்டோம் என்றும் நக்சலைட்டுகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு படைவீரர் ராகேஷ்வர் சிங் மன்ஹஸை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு மத்தியஸ்தரை நியமிக்க வேண்டும் எனவும் நக்சலைட்டுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமாண்டோ வீரர் ராகேஷ்வர், ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர். அவரை நக்சல்களின் பிடியில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, அவருடைய குடும்பத்தினர் ஜம்மு - பூஞ்ச் நெடுஞ்சாலையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். "தயவுசெய்து, என் தந்தையை விடுவிக்கவும்" என ராகேஷ்வரின் ஐந்து வயது மகள் ஷ்ராக்வி நக்சல்களிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிலையில் ராகேஷ்வர் சிங் மன்ஹஸ் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினரின் உருக்கமான வேண்டுகோளினை ஏற்று விடுவிக்கப்பட்டுள்ளார். சிறைபிடிக்கப்பட்ட கமாண்டோவின் விடுதலையை சத்தீஸ்கர் ஐ.ஜி உறுதிப்படுத்தியுள்ளார்.