விசாகப்பட்டினம் அருகே அதிரடி தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள்.. அதிர்ச்சியில் ஆந்திரா, ஒடிஷா அரசுகள்!
ஒடிஷா-ஆந்திரா உள்வனப்பகுதிகளில் தாக்குதல் நடத்தி வந்த மாவோயிஸ்டுகள் விசாகப்பட்டினம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
விசாகப்பட்டினம்: ஒடிஷா- ஆந்திரா எல்லையோர அடர்ந்த வனப்பகுதியில் தாக்குதல் நடத்தி வந்த மாவோயிஸ்டுகள் தற்போது விசாகப்பட்டினம் அருகே கண்ணிவெடி தாக்குதலை நடத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிஷாவின் செமிலிகுடா, கோரபுட் வழியாக சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூர் சென்றடையக் கூடியதுதான் விசாகப்பட்டினம்- ராய்ப்பூர் நெடுஞ்சாலை எண் 26.
விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயநகர், சாலூரை தாண்டிய உடன் மலைப்பகுதிகள் தொடங்கிவிடும். இம்மலைப்பகுதியின் முதல் சிறுநகரம்தான் சுங்கி. சாலூர்- சுங்கி இடையே ஆந்திரா எல்லை முடிந்து ஒடிஷா மாநிலத்தின் கோரபுட் மாவட்டம் தொடங்கிவிடும். கோரபுட் மாவட்டம் பிரிட்டிஷ் இந்தியாவில் சென்னை மாகாணத்தின் எல்லையாக இருந்து வந்தது வரலாறு.
பொதுவாக மாவோயிஸ்டுகள் கோரபுட் மாவட்டம் முடிவடையும் எல்லைப் பகுதி அல்லது மல்காங்கிரி மாவட்டங்களில்தான் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல்கள் நடத்துவது வழக்கம். தண்டகாருண்ய காடுகள் எனப்படும் அப்பகுதியில்தான் எல்லை பாதுகாப்புப் படையினர் முகாமிட்டு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் இம்முறை மாவோயிஸ்டுகள் ஆந்திரா- ஒடிஷா எல்லை தொடங்கும் பகுதியில் ராய்ப்பூர்- விசாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் விசாகப்பட்டினத்தில் இருந்து 150 கி.மீ தொலைவிலேயே பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தி இருப்பது ஆந்திரா, ஒடிஷா அரசுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.