மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: மும்பையை முடக்கிய கலவரம்.. என்ன நடக்கிறது மகாராஷ்டிராவில்?
மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் மகாராஷ்டிராவில் உச்சம் பெற்றுள்ளது.
Recommended Video
மும்பை: மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் மகாராஷ்டிராவில் உச்சம் பெற்றுள்ளது. கடந்த 40 வருடமாக இந்த போராட்டம் பெரிய அளவில் அம்மாநில அரசியலை பொருளாதாரத்தை ஆட்டிப்படைத்து வருகிறது.
மகாராஷ்டிராவில் நடந்த மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் பெரிய கலவரத்தில் முடிந்து இருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக அந்த மாநிலத்தில் இயல்பு வாழ்க்கையையே பாதிக்கப்பட்டு இருக்கிறது.
மராத்தா கிரந்தி மோட்சா என்ற அமைப்பின் தலைமையில் பல்வேறு மராத்தா அமைப்புகள் இந்த போராட்டத்தை நடத்தியது. தற்போது இந்த போராட்டத்தின் வரலாறு மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
யார் இவர்கள்
மகாராஷ்டிரத்தின் பூர்வகுடிகளில் மராத்தாவும் அடங்குவார்கள். தங்களை போர் இன குழுக்கள் என்று இவர்கள் அடையாள படுத்தி வருகிறார்கள். சில வரலாற்று அடையாளங்களும் ஆய்வுகளும் கூட இவர்கள் போர் இன குழுக்களாக இருந்ததாக கூறுகிறது. தொடக்கத்தில் இருந்தே இவர்கள் மிகவும் அதிக பொருளாதார வளம் கொண்டு ஆதிக்க குழுக்களாக இருந்துள்ளனர்.
பெரிய வலிமை
தற்போது நவீன மகாராஷ்டிராவில் இவர்கள் 32-40 சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். இவர்கள்தான் அந்த மாநிலத்தில் அரசியல் தலையெழுத்தை எப்போது நிர்ணயம் செய்வது. சரியாக சொல்ல வேண்டும் என்றால், இதுவரை தேர்வான 18 மகாராஷ்டிரா முதல்வர்களில் 13 பேர் மாரத்தா ஜாதியை சேர்ந்தவர்கள். இரண்டு பேர், அந்த ஜாதி கட்சிகளின் ஆதரவின் மூலம் வந்தவர்கள்.
பெரிய அளவில் பணம்
அதேபோல் மாநிலத்தின் பெரும்பாலான சொத்துக்கள் இவர்கள் வசம் இருக்கிறது. பெரும்பாலான டெண்டர்களை இவர்களே வைத்து இருக்கிறார்கள். அதேபோல் 60 சதவிகிதம் விவசாய நிலம் இவர்களிடமே இருக்கிறது. அரசியலில் பெரிய புள்ளிகள் பலர், தலைமையிடத்தில் இவர்கள் ஜாதியில் இருந்தே வேலை செய்கிறார்கள். அந்த அளவிற்கு அவர்கள் அந்த மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
என்னதான் பிரச்சனை
ஆனால் அவர்களுக்குள் இன்னொரு பிரச்சனை இருக்கிறது. அந்த 40 சதவிகித மக்களில் பெரும்பான்மையான மக்கள் விவசாயிகள். கடந்த சில வருடங்களாக மகாராஷ்டிரத்தில் விவசாயம் எந்த அளவிற்கு படுத்ததோ, அந்த அளவிற்கு இவர்களின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது. தொடக்கத்தில் பணக்காரர்களாக இருந்தவர்கள் சொத்துக்களை இழக்க தொடங்கினார்கள். அவர்களுக்கு கல்வியும் கிடையாது.
போட்டியாக பார்த்தனர்
இந்த நிலையில், இடஒதுக்கீடு மூலம் கல்வி பெற்ற தலித் மக்களையும், பிற்படுத்தப்பட்ட ஜாதியினரையும் இவர்கள் போட்டியாக பார்க்க ஆரம்பித்தனர். இதனால் தங்களை பிற்படுத்தப்பட்ட ஜாதியினராக அறிவிக்க வேண்டும், தங்களுக்கு ஓபிசி அந்தஸ்து அளிக்க விடும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த பிரச்சனை நடந்தது 1980களில். அப்போதில் இருந்து இப்போது வரை அவர்களுக்கு அந்த அந்தஸ்து அளிக்கப்படவில்லை.
கோரிக்கை வைக்க தொடங்கினர்
பிறப்படுத்தப்பட்ட ஜாதிக்கான இயக்குனராகும், அவர்களை பிற்படுத்தப்பட்ட மக்களாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியது. இதற்கு எதிராக அப்போது இருந்த அரசு வழக்கு தொடுத்தது. ஆனால் நீதிமன்றமும், மாரத்தா மக்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. அவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கொடுக்க வேண்டிய அளவிற்கு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை என்று கூறினார்கள்.
என்ன முன்னேற்றம்
அதன்பின் அவர்கள் தங்களை பிற்படுத்தப்பட்ட மக்களாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், 16 சதவிகித சிறப்பு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் 16 சதவிகித ஐடா ஒதுக்கீடு கொடுத்தால், 50 சதவிகித மொத்த இடஒதுக்கீட்டை தாண்டிவிடும் என்பதால் மாநில அரசால் அந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை.
போராட்டம் நடத்தினார்கள்
அப்போதில் இருந்து இப்போது வரை இதற்கு எதிராக போராட்டம் நடக்கிறது. திடீர் என்று மக்களை ஆயிரக்கணக்கில் இறங்கி போராட்டம் செய்வார்கள். முக்கியமாக தேர்தலுக்கு முந்தைய மாதம் அதிக அளவில் போராட்டம் நடக்கும்,. ஆனால் இப்போது வரை அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
அறிவிப்பு
இந்த நிலையில்தான், கடைசியாக அம்மாநில முதல்வர் பட்நாவிஸ், 12 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று சட்டசபையில் கூறினார். இதற்கு எதிர்க்கட்சிகளும் கூட ஒத்துழைப்பு வழங்கியது. ஆனால் மராத்தா இன மக்கள் அதை ஏற்றுகொள்ளவில்லை கொடுத்தால் 16 சதவிகிதம் இல்லையென்றால், ஓபிசி அந்தஸ்து என்று கூறினார்கள்.
இப்போது ஏன் போராட்டம்
இதற்கு எதிராக மூன்று நாட்களுக்கு முன் அமைதி பந்த் நடத்தினார்கள். மராத்தா கிரந்தி மோட்சா சார்பாக போராட்டம் நடந்தது. ஆனால் அதில் ஒரு மராத்தா இன விவசாயி, பாலத்தில் இருந்து விழுந்து தற்கொலை செய்துள்ளார். இதனால், அமைதி போராட்டம் வன்முறையாக மாறியது. இதன் காரணமாகவே கடந்த மூன்று நாட்களாக அங்கு பெரிய கலவரம் நடந்து வருகிறது.