அக். 28-ல் டெல்லி வருகை தருகிறார் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க்
டெல்லி: உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர் பெர்க் இம்மாதம் 28-ந் தேதி டெல்லி வருகிறார்.
டெல்லியில் உள்ள டவுன் ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அவர், ஐ.ஐ.டி மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசுகிறார். அப்போது பேஸ்புக் பயன்படுத்துவது குறித்து பொதுமக்களின் கேள்விகளுக்கும் நேருக்கு நேர் ஜூக்கர் பெர்க் விளக்கம் அளிக்கிறார்.
செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள பேஸ்புக் தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு நடைபெற்ற கேள்வி - பதில் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
அப்போது சமூகம் மற்றும் பொருளாதார சவால்களை சமூக வலைதளங்கள் மூலம் எவ்வாறு எதிர்கொள்வது என மோடி மற்றும் ஜூக்கர்பெர்க் விவாதித்தனர்.
இந்நிலையில் இந்தியா வரும் பேஸ்புக் நிறுவனர் மார்க் பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூக்கர் பெர்க் இந்தியா வந்தபோது டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் குறித்து இருவரும் விவாதித்தனர்.
இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 13 கோடி ஆகும். இந்தியாவில் ஒரு லாபகரமான சந்தையாக பேஸ்புக் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.