மசூதிகளில் ஆண்களுடன் இணைந்து பெண்களும் தொழுகை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிடுமா.. கட்ஜு
டெல்லி: சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல் மசூதிகளில் தொழுகை நடத்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உத்தரவிடுமா என மார்க்கண்டேய கட்ஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆணும் பெண்ணும் சமம் என்பதால் வழிப்பாட்டு தலங்களில் பாகுபாடு பார்க்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் பல்வேறு அமைப்பினர் வழக்கு பதிவு செய்தனர்.
இதன் மீது 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் 4 நீதிபதிகள் சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என தீர்ப்பு வழங்கினர். ஆனால் பெண் நீதிபதி மட்டும் மாறுப்பட்ட கருத்தை அளித்தார்.
எனினும் 4 நீதிபதிகளின் தீர்ப்பே அமலாகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் ஆங்கில நாளிதழ் ஒன்று கட்டுரை எழுதியிருந்தார்.
அதில் அவர் கூறுகையில் சபரிமலை கோயிலின் நூற்றாண்டு பழமையான நடைமுறையில் குறுக்கிடுவதன் மூலம், பிரச்சினைகள் நிறைந்த பெட்டியை உச்சநீதிமன்ற நீதிபதிகள் திறந்திருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள கோயில்கள், மசூதிகள் உள்ளிட்டவை அந்தந்த மத நம்பிக்கையுடனும், தனிப்பட்ட வழிபாட்டு முறைகளுடன் இருக்கின்றன.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான மசூதிகளில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்துக்களின் வழிபாட்டு முறைகளில் தலையிடும் உச்சநீதிமன்றம் அதே தைரியத்துடன், மசூதிகளில் பெண்களும் தொழுகை நடத்தலாம் என தீர்ப்பு வழங்குமா. இல்லாவிட்டால் உச்சநீதிமன்றத்துக்கு இந்துக்களுக்கு மட்டும் உத்தரவு பிறப்பிப்பது என்ற வரையறையை கொண்டுள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார்.