ஆறே மாதங்களில் புதுப்பொலிவு அடையப்போகிறது பிசிசிஐ.. கட்ஜு தலைமையில் வழிகாட்டு குழு அமைப்பு
டெல்லி: இந்திய கிரிக்கெட் வாரியத்தில் சீர்திருத்தம் செய்யும் நோக்கோடு, லோதா கமிட்டி வழங்கிய பரிந்துரைகளில் பலவற்றை ஆறு மாதங்களுக்குள் அமல்படுத்த பிசிசிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த பரிந்துரைகளை புரிந்து கொண்டு அமல்படுத்துவதற்கு சட்ட வல்லுநர்கள் உதவியை நாடியுள்ளது பிசிசிஐ. இதற்காக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தலைமையில் நால்வர் குழுவை அமைத்துள்ளது.
கட்ஜு 2006 முதல் 2011வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த அனுபவக்காரர். மேலும் தற்போதைய பல்வேறு பிரச்சினைகளுக்கு சோஷியல் மீடியாக்கள் மூலம் கருத்து சொல்லி பிரபலமானவர்.
ஒருமனதாக முடிவு
மார்கண்டேய கட்ஜுவை சட்ட நிபுணர் குழு தலைவராக நியமிக்க பிசிசிஐ நிர்வாகிகள் ஒரு மனதாக முடிவு செய்துள்ளனர்.
மாற்றங்கள்
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பிசிசிஐயில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது. நிறைய டெக்னிக்கல் மற்றும் சட்ட விவகாரங்கள் இதில் அலசி ஆராயப்பட வேண்டியுள்ளது.
கட்ஜு தலைமை
இந்த விஷயத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, சட்ட வல்லுநர்கள் குழுவை, மார்கண்டேய கட்ஜு தலைமையில் அமைத்துள்ளனர். மற்றொரு முன்னாள் நீதிபதி அபிநவ் முகர்ஜியும் இக்குழுவில் இடம்பிடித்துள்ளார். இவ்வாறு பிசிசிஐ அறிக்கை கூறுகிறது.
நாளை கூட்டம்
சட்ட வல்லுநர் குழு நாளை தனது முதல் கூட்டத்தை நடத்த உள்ளது. நாளை மறுநாள், பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.