டெல்லியில் ஜல்லிக்கட்டு ஆதரவு நிகழ்ச்சி.. சிறப்புரையாற்றுகிறார் மாரகண்டேய கட்ஜு
டெல்லி: டெல்லியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு தொடர்பான நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு பங்கேற்று உரையாற்றுகிறார்.
ஜல்லிக்கட்டு விஷயத்தில் ஆரம்பம் முதலே தமிழர்கள் கோரிக்கைக்கு ஆதரவாக உள்ளார் நீதிபதி மார்கண்டேய கட்ஜு. போராட்டங்கள் நடக்கும்போது பல்வேறு சட்ட தகவல்களையும் அவர் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், அவர் தற்போது பேஸ்புக்கில் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில், டெல்லி பல்கலைக்கழக மாடல் நாடாளுமன்ற அமைப்பு சார்பில் நடைபெற உள்ள ஆண்டு விழா நிகழ்ச்சியில் தான் பங்கேற்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வரும் 5ம் தேதி மாலை 3.45 மணி முதல் நிகழ்ச்சி தொடங்குகிறது. அதில், இந்த மார்டன் உலகத்தில் ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய விளையாட்டின் பங்கு என்ற தலைப்பில் அவர் உரையாற்ற உள்ளார்.
இதில் ஜல்லிக்கட்டு தொடர்பான மேலும் பல அம்சங்கள் குறித்து மார்கண்டேய கட்ஜு பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.