திருமணமான பெண் 5 பேரால் பலாத்காரம்: சகோதரருக்கு வாட்ஸ்ஆப்பில் வந்த வீடியோ
பில்பிட்: உத்தர பிரதேசத்தில் 3 மாத கைக்குழந்தையுடன் காணாமல் போன பெண் 5 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ வாட்ஸ்ஆப் மூலம் அவரது சகோதரருக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பதாவ்ன் மாவட்டத்தில் உள்ள பர்ஹா கிராமத்தில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டில் இருந்து 3 மாத கைக்குழந்தையுடன் இளம்பெண் ஒருவர் கடந்த நவம்பர் மாதம் 23ம் தேதி கணவர் வீட்டிற்கு கிளம்பியுள்ளார்.
தாய் வீட்டில் இருந்து கிளம்பிய அவர் கணவர் வீட்டை அடையவில்லை. இதையடுத்து அவர் காணாமல் போய்விட்டதாகக் கூறி அவரின் குடும்பத்தார் போலீசில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அந்த பெண்ணின் சகோதரருக்கு வாட்ஸ் ஆப் மூலம் வீடியோ ஒன்று வந்தது. வீடியோவில் ஒரு பெண்ணை 4 முதல் 5 ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்யும் கொடூரமான காட்சி இருந்தது. அந்த வீடியோவில் இருந்த பெண் காணாமல் போன தனது சகோதரி என்பதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடியோவில் உள்ள நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணை தேடி வருகிறார்கள். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.