வால் நட்சத்திர சவாலை சிறப்பாக சமாளித்து விட்டது மங்கள்யான்- இஸ்ரோ
பெங்களூர்: கடந்த வாரம் ஸ்லைடிங் ஸ்பிரிங் என்ற வால் நட்சத்திரம் செவ்வாய் கிரகத்தைத் தாண்டிச் சென்றபோது, அதனால் ஆபத்து ஏற்பட்டு விடாத வகையில் சற்று பாதை மாற்றி நிறுத்தப்பட்டிருந்த இந்தியாவின் மங்கள்யான் விண்கலமானது, தற்போது தனது வழக்கமான பாதையில் நிலை கொண்டிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக கடந்த மாதம் நழைந்தது மங்கள்யான்.
செவ்வாய் பிரவேசம் முடிந்து ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் கடந்த வாரம் அது பெரும் சவால் ஒன்றைச் சந்தித்தது.
பாதுகாப்பான இடத்திற்கு நகர்வு:
ஸ்லைடிங் ஸ்பிரிங் என்ற வால் நட்சத்திரம் மின்னல் வேகத்தில் செவ்வாய் கிரகத்தைக் கடந்து சென்றது. இதையடுத்து அது, மங்கள்யான் உள்ளிட்ட விண்கலங்கள் மீது மோதி விடாமல் இருப்பதற்காக சுற்றுப் பாதையில் நிலை கொண்டுள்ள அனைத்து விண்கலங்களையும் பாதுகாப்பான இடத்திற்கு அந்தந்த நாட்டு விஞ்ஞானிகள் நகர்த்தி வைத்தனர்.
இஸ்ரோவின் பணி தொடரும்:
வால் நட்சத்திரத்தால் எந்தவிதமான ஆபத்தும் ஏற்படவில்லை. தற்போது மங்கள்யான் தனது வழக்கமான பாதைக்கு வந்து விட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் தனது பணியையும் அது தொடர்ந்து வருவதாகவும் இஸ்ரோ கூறியுள்ளது.
சவாலே சமாளி:
இதுகுறித்து இஸ்ரோ செயற்கைக் கோள் மைய இயக்குநர் எஸ்.கே.சிவக்குமார் கூறுகையில், வால் நட்சத்திர சவாலை மங்கள்யான் சமாளித்து விட்டது.
தவறாக எதுவும் நடக்கவில்லை:
தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. அக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் வால் நட்சத்திரத்தால் ஆபத்து இருந்தது. ஆனால் எதுவும் தவறாக நடக்கவில்லை.
பெரும் சாதனைப் பணி:
தற்போது திட்டமிட்டபடி அனைத்து பணிகளையும் மங்கள்யான் செய்து வருகிறது. மங்கள்யான் விண்கலத்தை விண்ணில் செலுத்தியதும், செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் செலுத்தியதும் மிகப் பெரிய சாதனை. அதன் பின்னர் மங்கள்யான் சிறப்பாக செயல்பட்டு வருவது இன்னொரு பெரிய சாதனையாகும்.
இலக்கில் பயணிக்கும் சோதனை:
தற்போது வால் நட்சத்திரத்தி சவாலையும் அது சமாளித்துள்ளது. இதன் மூலம் நமது சாதனைகளின் அளவு கூடியுள்ளது. நமது சோதனைகளும் திட்டமிட்ட இலக்கில் போய்க் கொண்டுள்ளன என்றார் அவர்.