ராஜ்யசபா எம்.பிக்களாக சுப்பிரமணியன் சுவாமி, மேரி கோம் பதவி ஏற்பு
டெல்லி: நியமன எம்.பிக்களாக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, பிரபல குத்துச் சண்டை வீராங்கணை மேரி கோம் ஆகியோர் இன்று ராஜ்யசபாவில் பதவி ஏற்றுக் கொண்டனர்.
ராஜ்யசபாவில் மொத்தம் உள்ள நியமன எம்.பி.க்களின் எண்ணிக்கை 12. அதில் தற்போது 7 இடங்கள் காலியாக உள்ளது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மலையாள நடிகரும், பாஜகவின் நட்சத்திர பேச்சாளருமான சுரேஷ் கோபி, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், பத்திரிக்கையாளர் ஸ்வபன் தாஸ்குப்தா, பொருளாதார நிபுணர் நரேந்திர ஜாதவ் ஆகியோரின் பெயர்களை மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது.
தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், சுப்பிரமணிய சுவாமி, பிரபல குத்துச் சண்டை வீராங்கணை மேரி கோம் ஆகியோர் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ராஜ்யசபா சபாநாயகரும், துணை ஜனாதிபதியுமான ஹமித் அன்சாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.