தலித் அமைப்பினர் போராட்டம்: வடமாநிலங்களில் வன்முறையால் பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு
நாடு முழுவதும் தலித் அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் பலி எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
டெல்லி: தலித் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தளர்வு செய்யப்பட்டதை எதிர்த்து, நாடு முழுவதும் தலித் அமைப்பினர் போராடி வருகின்றனர். வடமாநிலங்களில் வன்முறையாக மாறிய இந்தப் போராட்டத்தில் இதுவரை ஒன்பது பேர் பலியாகியுள்ளார்.
தலித் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கடந்த மாதம் 20ம் தேதி சில திருத்தங்களை உச்சநீதிமன்றம் மேற்கொண்டது. அதன்படி, அரசு ஊழியர்கள் மற்றும் தனி மனிதர்களை இந்த சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது எஸ்.சி.,எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துபோகச் செய்யும் முயற்சி என்று நாடு முழுவதிலும் உள்ள தலித் அமைப்புகள் இந்த சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. இந்த தீர்ப்பை எதிர்த்தும், இதை திரும்பப் பெறக்கோரியும், ஏப்ரல் 2ம் தேதி தலித் அமைப்புகள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தன.
தலித் அமைப்பினர்
இந்நிலையில், நேற்று திட்டமிட்டதைப் போல வடமாநிலங்களில் போராட்டம் நடந்தது. மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், ஜார்கண்ட், பீகார் ஆகிய மாநிலங்க்ளில் பெரிய அளவில் பேரணியும் நடத்தப்பட்டது. அப்போது போராட்டக்காரர்கள் பலத்த வன்முறையில் ஈடுபட்டனர். பேருந்துகள் மற்றும் பொதுச்சொத்துகள் மீது கல்வீசியும், தீ வைத்தும் தாக்குதல் நடத்தினர். பல இடங்களில் தனியார் மற்றும் பொதுச்சொத்துகள் சூறையாடப்பட்டன.
துப்பாக்கிச் சூட்டில் பலி
மத்திய பிரதேசத்தின் குவாலியர், பிந்த், மொரேனா, சாகர், சத்னா ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவில் வன்முறை ஏற்பட்டது. இதனைத் தவிர்க்க போராட்டக்காரர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகைக்குண்டு வீசி தடியடித்தாக்குதல் நடத்தினர். அப்போது குவாலியரில் போலீஸாருக்கும், போராட்டக்காரார்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். பிந்த், மொரேனா ஆகிய இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர். இதனைத்தொடர்ந்து அந்த இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பலி எண்ணிக்கை 9
ராஜஸ்தானிலும் நேற்று வன்முறை தலைதூக்கியது. மாநிலத்தின் பல இடங்களில் பொதுச்சொத்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்தக் கலவரத்திலும் ஒருவர் கொல்லப்பட்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த கலவரத்திலும் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் நடந்த போராட்டத்தில், இறந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆகியுள்ளது.
நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
இந்நிலையில், மாநிலங்கள் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் மத்திய அரசு ராணுவத்தை அனுப்பும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.மேலும், எஸ்.சி எஸ்.டி சட்டம் குறித்த தனது தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் மத்திய அரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
போக்குவரத்து முடக்கம்
வடமாநிலங்கள் பெரும்பாலானவற்றில் முழு அடைப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதேபோல் சாலை மறியலும் ஈடுபட்டதால் வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. போராட்டம் காரணமாக பல மாநிலங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறையும் விடப்பட்டது. இந்நிலையில் தலித் மக்களின் இந்தக் கோபம் பாஜக அரசுக்கு மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.