கொல்கத்தாவின் 150 ஆண்டு பழமையான மார்க்கெட்டில் திடீர் தீவிபத்து – மீன் கடை சாம்பல்
கொல்கத்தா: மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவின் மத்திய பகுதியில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரபலமான புதிய மார்க்கெட் வளாகத்தில் மொத்த விலையில் மீன்களை விற்பனை செய்யும் பிஷ் பஜார் என்ற கடையில் இன்று பிற்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்தினால் ஏற்பட்ட புகைமூட்டம் அப்பகுதி முழுவதும் பரவியதால் அங்குள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர். கொழுந்து விட்டு எரியும் தீயை மேலும் பரவவிடாமல் கட்டுப்படுத்தி அணைக்கும் முயற்சியில் தீ அணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தீ விபத்து பற்றி தகவல் கொடுத்து வெகு நேரம் கழித்துதான் தீ அணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததாக கடை உரிமையாளர்கள் குற்றம் சாட்டினர்.
குறுகிய நெரிசலான சந்துகளில் வாகனம் வருவது மிகவும் சிரமமாக இருந்தது என்று தீ அணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இந்த விபத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.