அமெரிக்க பெண்ணை பார்த்து சுய இன்பம் செய்த மும்பை வாலிபர் அதிரடி கைது
மும்பை: அமெரிக்க பெண்ணை பார்த்து மும்பையில் இளைஞர் ஒருவர் சுய இன்பம் செய்த விவகாரம், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கவனத்திற்கு சென்றதையடுத்து, அந்த இளைஞரை கைது செய்யுமாறு மும்பை போலீசாருக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்தார். முதல்வர் உத்தரவை தொடர்ந்து துரிதமாக செயல்பட்ட போலீசார், வாலிபரை இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
மும்பையில் வசிக்கும் அமெரிக்க பெண் எழுத்தாளரான மர்யன்னா அப்டோ, சில தினங்களுக்கு முன்பு தனது டிவிட்டர் தளத்தில் வெளியிட்ட ஒரு போட்டோ நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மும்பையில் பட்டப்பகலில் ஒரு இளைஞன் தன்னை பார்த்து சுய இன்பம் செய்தார் என்ற வாக்கியத்தோடு அந்த இளைஞனின் படத்தோடு அவர் டிவிட் செய்திருந்தார். இது ஆயிரக்கணக்கானோரால் ரீடிவிட் செய்யப்பட்டது.
'அதீதி தேவோ பவ' (விருந்தினர் தெய்வத்திற்கு சமம்) என்ற வாசகத்துடன், அமீர் கானை வைத்து மோடி அரசு விளம்பரம் செய்துவரும் நிலையில், இச்சம்பவம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
டிவிட்டரிலேயே அமெரிக்க பெண்மணிக்கு இந்தியர்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர். இதனிடையே, இத்தகவல் முதல்வர் பட்னாவிஸ் கவனத்திற்கும் சென்றுள்ளது. குற்றவாளியை உடனே கைது செய்ய மும்பை போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.
முதலில் போலீசில் புகார் அளிப்பதை தவிர்த்த அமெரிக்க பெண்மணி, காவல்துறையின் வற்புறுத்தலால் புகார் அளித்துள்ளார். டிவிட்டரில் இருந்து அந்த இளைஞரின் போட்டோவை நீக்கியுள்ளார். இனிமேல் காவல்துறை இதை கையாளும் என்று டிவிட் செய்திருந்தார்.
முதல்வரின் உத்தரவு வெளியான 24 மணி நேரத்திற்குள், கொலபா பகுதியை சேர்ந்த அந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரது பெயர் கோபால் வால்மீகி என்று கூறப்படுகிறது. கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.