மதுராவில் டீசல் திருடர்கள் அட்டகாசம்.. குமுறிக் கொண்டு வெளியேறி வீணான டீசல்!
மதுரா: உத்திரப்பிரதேச மாநிலம் மதுராவில் டீசல், பெட்ரோல் திருடர்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் ஆங்காங்கே இந்தியன் ஆயில் நிறுவனம் போட்டு வைத்துள்ள எரிபொருள் பைப்லைன்களை உடைத்து திருடுவதால் பல இடங்களில் பெட்ரோல், டீசல் வெளியேறி வீணாகி வருகிறது.
இந்த ஆயில் திருடர்களால் ஆண்டுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு கச்சா எண்ணெய் வீணாகி வருகிறதாம்.
மதுராவில் எண்ணைய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இந்த ஆலைக்காக பல இடங்களில் பைப்லைன்கள் பூமிக்குள்ளும், வெளியிலுமாக புதைக்கப்பட்டுள்ளன. இவற்றை உடைத்து ஆங்காங்கே திருடுவோர் அதிகம் உள்ளனர்.
இந்த எண்ணெய்த் திருடர்களைப் பிடிக்க தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் பலன் இல்லை. இவர்கள் போட்டு வைத்து விடும் ஓட்டையால் டீசல், பெட்ரோல், கச்சா எண்ணெய் ஆகியவை வீணாகி வெளியேறி பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் மதுராவில் அடிக்கடி ஆங்காங்கே டீசல் பைப்புகள் ஓட்டையாகி அவை வெளியேறும் காட்சிகளை சகஜமாக பார்க்கலாம்.
புதன்கிழமையன்று இப்படித்தான் ஆர்ஹரா பகுதியில் ஐஓசி பைப்லைன் ஒன்று உடைந்து அதிலிருந்து டீசல் பெருக்கெடுத்து ஓடியது. வானை நோக்கி பீய்ச்சி அடித்த டீசல் வெளியேற்றத்தால் பெரும் இழப்பை ஐஓசி சந்தித்துள்ளது.