செல்போன் பேசியபடி ரோட்டில் நடந்தால் ரூ.21,000 அபராதம்...பெண்களைக் குறிவைக்கும் உ.பி. கிராமம்!
செல்போன் பேசியபடி ரோட்டில் நடந்து செல்லும் பெண்களுக்கு ரூ.21,000 அபராதம் விதிக்க உத்தரப்பிரதேச மாநில கிராமம் ஒன்றில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
லக்னோ : உ.பி.யில் கிராமம் ஒன்றில் ரோட்டில் நடந்தபடி செல்போன் பேசும் பெண்களுக்கு ரூ.21,000 அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு பெண்கள் அமைப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள மடோரா கிராமத்தில் பெண்கள் செல்போனில் பேசிய படி ரோட்டில் நடந்து சென்றால் அபராதம் விதிக்கப்படும் என பஞ்சாயத்துக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த பஞ்சாயத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில்," பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால் செல்போனில் பேசியபடி ரோட்டில் நடந்து செல்லும் பெண்களுக்கு ரூ.21,000 அபராதம் விதிக்கப்படும். இதே போன்று பசுவதை கூடங்கள் அல்லது பசுக்களை களவாடிச் செல்பவர்களுக்கு ரூ.2 லட்சமும், சாராயம் விற்பனை செய்தால் ரூ.1.11 லட்சமும் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அபராதம் செலுத்த முடியாத நிலையில் இருப்பவர்களின் சொத்துக்கள் விற்கப்பட்டு அதில் இருந்து வசூலிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.