மலாலாவை வைத்து சர்ச்சை விளம்பரம் வெளியிட்ட 'கர்ல் ஆன்' மெத்தை நிறுவனம்!
மும்பை: இந்தியாவைச் சேர்ந்த கர்ல் ஆன் மெத்தை நிறுவனம், பாகிஸ்தான் சிறுமியான மலாலா சுடப்படுவது போன்ற விளம்பரத்தை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதுதொடர்பாக அது வெளியிட்டுள்ள கார்ட்டூன் படம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. எதிர்ப்பும் எழுந்துள்ளது. இதேபோல மகாத்மா காந்தியை வைத்தும் அது தனது கார்ட்டூன் விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு 14 வயது சிறுமியான மலாலா யூசுப்சாய், தலிபான் தீவிரவாதி ஒருவனால் துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில் தலையில் குண்டு பாய்ந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில், அவர் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் உயிர் பிழைத்தார். தற்போது லண்டனிலேயே வசித்தும் வருகிறார்.
பெண் கல்வி உரிமைக்காக குரல் கொடுத்ததால்தான் மலாலா சுடப்பட்டார். தற்போது அவர் பெண் கல்வி உரிமைக்காகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராகவும் லண்டனில் இருந்தபடி போராடி வருகிறார்.
சர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ள அவரை வைத்து கர்ல் ஆன் நிறுவனம் இப்படி கார்ட்டூன் வெளியிட்டிருப்பது எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விளம்பரத்தில் மலாலா துப்பாக்கியால் சுடப்பட்டு கீழே விழுவது போலவும், ஆனால் கர்ல் ஆன் மெத்தையில் அவர் விழுந்ததும் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து தற்போதைய நிலைக்கு வந்து விட்டதைப் போலவும் அதில் சித்தரித்துள்ளனர். அதாவது கர்ல் ஆன் மெத்தை அதைப் பயன்படுத்துவோருக்கு உயர்வு தரும் என்பது போல இந்த கார்ட்டூனை வெளியிட்டுள்ளனர்.
மொத்தம் 3 விதமான கார்ட்டூன் ஓவியங்களை கர்ல் ஆன் வெளியிட்டுள்ளது. அதில் ஒன்று மலாலா குறித்தது. 2வது ஸ்டீ் ஜாப்ஸ் குறித்தது. 3வது மகாத்மா காந்தி குறித்தது. காந்தி குறித்த படத்தில் அவர் தென் ஆப்பிரிக்காவில் இனவெறி வெள்ளையர்களால் ரயிலிலிருந்து கீழே தள்ளி விடப்படும் காட்சியை வைத்து வரையபப்பட்டுள்ளது.