பிராமணர்களுக்கு எதிராக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட தலித் தலைவரை கட்சியில் இருந்து நீக்கி மாயாவதி அதிரடி!
லக்னோ: பிராமணர்களுக்கு எதிரான கருத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட தலித் தலைவரை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக களமிறங்கியுள்ளன. பாஜகவில் யாரை முதல்வர் வேட்பாளராக்குவது என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. மேலும் அனைத்து உயர்ஜாதியினர் வாக்குகளையும் பெறுவதற்கான முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டுவருகிறது.
ஆளும் சமாஜ்வாடி கட்சி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகளைத் தக்க வைக்க வியூகம் வகுத்து செயல்படுகிறது. பகுஜன் சமாஜ்கட்சியோ தலித்துகளுடன் உயர்ஜாதியினர் வாக்குகளையும் தம் பக்கம் திருப்புவதில் முனைப்பு காட்டுகிறது.
கடந்த 2007-ம் ஆண்டு இப்படியான ஒரு வியூகம் வகுத்து அதில் வெற்றியும் பெற்றது பகுஜன் சமாஜ்கட்சி. தற்போதைய தேர்தலிலும் இதே பார்முலாவை கடைபிடிக்க விரும்புகிறார்அக்கட்சித் தலைவர் மாயாவதி.
இதை வெளிப்படுத்தும் விதமாக பிராமணர்களுக்கு எதிராக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட சஞ்சய் பார்தியை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார் மாயாவதி. ஆனால் சஞ்சய் பார்தியோ, தம்முடைய ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு யாரோ அப்படியான பதிவுகளைப் போட்டுள்ளனர்; விரைவில் மாயாவதி உண்மையை உணர்ந்து கொள்வார் என கூறியுள்ளார்.
இப்போதும் கை கொடுக்குமா மாயாவதியின் பழைய வியூகம்?