அடுப்பு அரசியல்: அமித்ஷா சமையல்காரரை வலைவீசி தேடும் மாயாவதி.. ஏன் தெரியுமா?
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தலித் பிரிவினருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். தலித் வாக்குகளை பெரிதும் நம்பியுள்ள மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு இது பெரும் குடைச்சலை கொடுத்துள்ளது.
எப்படியாவது அமித்ஷாவை தர்ம சங்கடத்தில் சிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அன்றைய விருந்து நிகழ்ச்சியின் சமையல்காரரை அக்கட்சி வலைவீசி தேடிவருகிறதாம்.
காரணம் இதுதான்: தலித்துகளோடு அமர்ந்து அமித்ஷா உணவு சாப்பிட்டாலும்கூட, அதை சமைத்தது உயர் ஜாதி பிரிவை சேர்ந்த சமையல்காரராம். அந்த சமையல்காரரை எப்படியாவது கூட்டி வந்து அம்பலப்படுத்தி விட்டால் அது அமித்ஷாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும், பாஜகவுக்கு தலித்துகள் மத்தியில் ஆதரவு கிடைக்காது என்று திட்டமிட்டுள்ளாராம் மாயாவதி.
இந்த தகவலை பகுஜன் சமாஜ் மண்டல ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் குரீல் உறுதி செய்துள்ளார். விரைவில் சமையல்காரரை பிடித்து உலகத்திற்கு அம்பலப்படுத்துவோம் என்று அவர் கூறியுள்ளார். மேலும், அமித்ஷாவுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டதில் பெரும்பாலானோர் பின்ட் எனப்படும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் என்றும், தலித்துகள் சொற்பமாகவே இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அமித்ஷாவுடன் பாஜகவை சேர்ந்த 250 பேர் வந்ததாகவும், ஆனால், தலித்துகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டதோ 50 பேர்தான் என்றும், இது பாஜகவினர் மத்தியிலுள்ள ஜாதிய உணர்வை காட்டுகிறது என்றும், ராம்குமார் குரீல் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையெல்லாம் பார்த்து, அட, இப்போ என்னதாம்பா உங்களுக்கு பிரச்சினை என சலித்துக்கொண்டுள்ளனர் உத்தர பிரதேசவாழ் தலித் மக்கள்.