வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜக தில்லுமுல்லு என குற்றச்சாட்டு.. கோர்ட்டுக்கு போகிறார் மாயாவதி
உத்தரபிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாகவும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதி கூறியுள்ளார்.
லக்னோ: உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய 5 மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் உ.பியில் 325 தொகுதிகளில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து சமாஜ்வதி - காங்கிரஸ் கூட்டணி 47 இடங்களை பிடித்தது. மேலும் பகுஜன் சமாஜ் கட்சி வெறும் 19 இடங்களை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியடைந்தது.
இந்நிலையில் உத்தரபிரதேச தேர்தல் முடிவில் முறைகேடு நடந்துள்ளதாக மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவியுமான மாயவதி கூறியதாவது: உத்தரபிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்கிறது. இவற்றின் மூலம் பாஜக இந்திய ஜனநாயகத்தை படுகொலை செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது என்றும் மாயாவதி தெரிவித்தார்.
மேலும் இந்த தேர்தலை ரத்து செய்துவிட்டு புதிய தேர்தலை நடத்தவேண்டும் . இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். இதனைதொடர்ந்து நாடு முழுவதும் எங்கள் கட்சியின் சார்பாக மிக பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.