ஸ்மிருதி இரானி கையால் எம்.பி.ஏ. பட்டம் பெற மறுத்துள்ள ஜம்மு காஷ்மீர் மாணவர்
ஸ்ரீநகர்: நாட்டில் சுதந்திரம் குறைந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கையால் பட்டம் பெற மறுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபொராவில் உள்ளது இஸ்லாமிக் யூனிவர்சிட்டி ஆப் சயன்ஸ் அன்ட் டெக்னாலஜி(ஐயுஎஸ்டி). அந்த பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது.
பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்குவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நாளை எம்.பி.ஏ. பட்டம் பெற வேண்டிய சமீர் கோஜ்வாரி என்பவர் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,
முதுகலை பட்டம் பெறுவது ஒரு மாணவருக்கு கவுரமான விருதை பெறுவது போன்றது ஆகும். ஆனால் அக்டோபர் 19ம் தேதி நடக்கும் பட்டமளிப்பு விழாவில் சமீர் கோஜ்வாரி ஆகிய நான் பட்டத்தை பெற மாட்டேன். நாட்டில் சுதந்திரம் குறைந்து வருவதை கண்டித்து இந்திய எழுத்தாளர்கள் தங்களின் இலக்கிய விருதுகளை திருப்பிக் கொடுத்து வருகிறார்கள்.
இதுவரை 41 எழுத்தாளர்கள் தங்களின் விருதுகளை திருப்பிக் கொடுத்துள்ளனர். ஐ.யு.எஸ்.டி.யின் முதல் பட்டமளிப்பு விழாவுக்கு பாஜக மத்திய அமைச்சரவையைச் சேர்ந்த ஸ்மிருதி இரானி தலைமை தாங்குவார் என்று கூறப்படுகிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.