மோடி பதவியேற்பு நாளில் கறுப்புக்கொடி ஏந்திய வைகோ... கைதாகி விடுதலை
டெல்லி: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் வருகைக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தியவாறு 144 தடையை மீறி நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல முயன்ற மதிமுக பொதுச் செயலர் வைகோ மற்றும் அக்கட்சியினர் சுமார் 187 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். சிலமணிநேரங்களுக்கு பின்னர் இரவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக சார்பில் டெல்லி நாடாளுமன்றச் சாலையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய வைகோ கூறியதாவது:
மோடிக்கு வாழ்த்து
லோக்சபா தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று பிரதமராகப் பதவி ஏற்க உள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். பாஜகவின் தேர்தல் வெற்றியை, இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே கணித்துக் கூறினேன்.
நல்லதும் கெட்டதும்
தற்போது நல்லதும், கெட்டதும் சேர்ந்தே நடைபெறுகிறது. ஒளியும், இருளும் சூழ்ந்துள்ளது. நம்பிக்கையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றது போரல்ல; இனப்படுகொலை ஆகும்.
இலங்கை இனப்படுகொலை
அத்தகைய இனப்படுகொலையை நடத்திய ராஜபக்சேவுக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். இலங்கை போரில் உதவி செய்ததன் மூலம் தமிழர்களுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு துரோகம் இழைத்துள்ளது.
அமைதியாக ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், பிரதமர் பதவி ஏற்பு விழாவுக்கு ராஜபக்சேவை அழைத்திருப்பது அவ் விழாவைக் களங்கப்படுத்தியுள்ளது. எனவே, பிரதமர் பதவி ஏற்பு விழாவுக்கு வருகை தந்துள்ள இலங்கை அதிபருக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கவும், இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும், இலங்கை விவகாரம் குறித்து நரேந்திர மோடி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் காந்திய வழியில் அமைதியாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
பாகிஸ்தானுடன் இணக்கம்
பாகிஸ்தானுடன் இணக்கமான உறவு ஏற்படுத்த முயல்வது வரவேற்கத்தக்கது. பாகிஸ்தானுடன் நான்கு முறை போர் நடத்தியும் பாகிஸ்தானில் வாழும் இந்தியர்களுக்கு எதிராக போர்க் குற்றங்களையோ, இனப் படுகொலையையோ அந்நாடு செய்யவில்லை. ஆனால், இலங்கையில் ஆயுதம் ஏந்தாத லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
அழிக்கப்படும் தமிழர் இனம்
இலங்கை விவகாரத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடைப்பிடித்த கொள்கைகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொடரக் கூடாது.
இலங்கையில் ஹிந்து கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் இடிக்கப்பட்டு, புத்த விகாரங்களை எழுப்பி வருகின்றனர். தமிழர்களின் குடியிருப்புகள் அழிக்கப்பட்டு சிங்களர்களைக் குடியேற்றி வருகின்றனர். தமிழர்களின் கல்லறைகள் அழிக்கப்பட்டுள்ளன.
ராஜபக்சேவுக்கு எதிராக
578 மீனவர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, தற்போது மீனவர்களை விடுவித்திருப்பது முட்டாளாக்கும் செயல். இத்தகைய சூழலில், எங்கள் போராட்டம் மோடி அரசுக்கு எதிரானது அல்ல. ராஜபக்சே வருகைக்கு எதிராகவே போராடுகிறோம்.
கறுப்புகொடி போராட்டம்
இந்தியாவுக்கு ராஜபக்சே வரும்போதெல்லாம் அவருக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம். இந்தியாவை உன்னதமான சிகரங்களுக்கு நரேந்திர மோடி இட்டுச் செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழர்களின் நம்பிக்கை
ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொள்கையைப் பின்பற்ற வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இது தொடர்பான கோரிக்கையை நரேந்திர மோடியிடமும் முன்வைத்தேன். மோடி அரசு அமையும்; தமிழர்களின் துயரம் நீங்கும் என கோடிக்கணக்கான தமிழர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்றார் வைகோ.
தமிழகத்தில் இருந்து
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. கணேச மூர்த்தி, மதிமுக உயர்நிலைக் குழு உறுப்பினர்-வழக்குரைஞர் தேவதாஸ், மாவட்ட செயலாளர்கள் ஜீவன், சேரன், ஸ்டீபன், மதிமுக இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கைதாகி விடுதலை
தடையை மீறி நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்ற வைகோ உள்ளிட்ட 187 மதிமுகவினரை நாடாளுமன்றச் சாலை காவல்நிலையம் அருகே போலீசார் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட அனைவரும் சுமார் இரவு 8 மணி அளவில் விடுவிக்கப்பட்டனர்.