தீவிரவாதிகளிடம் இருந்து நர்ஸ்கள் மீட்கப்பட்டது எப்படி?
டெல்லி: இராக் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் மரண பிடியில் இருந்து 46 இந்திய நர்ஸ்கள் மீட்கப்பட்டது எப்படி என்பது குறித்த முழு விவரத்தை வெளியிட முடியாது என்றும், இந்த மீட்பு நடவடிக்கை எப்படி, யார், யார் உதவியுடன் நடந்தது என்ற தகவல்களை வெளியிட முடியாது என்றும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சயீது அக்பரூதீன் டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில்,
|
மருத்துவமனையிலேயே பணயக் கைதிகளாய்...
இராக்கில் 46 இந்திய நர்ஸ்கள் திக்ரித் நகரில் சிக்கி கொண்ட தகவல் கிடைத்த நாள் முதலே, நாங்கள் அவர்கள் பற்றி கண்காணித்துக் கொண்டிருந்தோம். தீவிரவாதிகள் அவர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை. அவர்களை மருத்துவமனையிலேயே தங்க வைத்திருந்தனர்.
வலுக்கட்டாயமாக பஸ்சில் ஏற்றி...
திக்ரித் நகரில் இருந்து 46 பேரையும் மொசூல் நகருக்கு தீவிரவாதிகள் அழைத்துச் செல்ல திட்டமிட்ட போது, அதை நர்ஸ்கள் விரும்பவில்லை. தீவிரவாதிகளுடன் செல்ல அவர்கள் பயந்தனர். இதையடுத்து நாங்கள் ஈராக்கில் உள்ள சமூக ஆர்வலர்கள் உதவியுடன் தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு கொண்டு பேசினோம். ஆனாலும் 46 நர்ஸ்களையும் தீவிரவாதிகள் வலுக்கட்டாயமாக பஸ்சில் மொசூல் நகருக்கு அழைத்துச் சென்றனர்.
பல்வேறு ஆட்கள், தூதர்கள் மூலம் பேச்சுவார்த்தை...
அப்போது நாங்கள் நர்ஸ்களை தொடர்பு கொண்டு தைரியம் கொடுத்தோம். தீவிரவாதிகள் சொல்வது போல மொசூல் செல்லுங்கள். உங்களை அங்கிருந்து மீட்க ஏற்பாடு செய்கிறோம் என்று உறுதியளித்தோம். ஆனாலும் நர்ஸ்கள் பயந்தபடியே சென்றனர்.
இதற்கிடையே நாங்கள் பல்வேறு முறைகள், ஆட்கள், தூதர்கள் மூலம் தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்பு கொண்டு பேச்சு நடத்தினோம்.
பெரும் போராட்டம்...
நர்ஸ்களை விடுவிக்க மிக நீண்ட போராட்டத்தை சந்திக்க வேண்டியதிருந்தது. பல இடங்களில் கதவுகளை தட்டினோம். அதிர்ஷ்டவசமாக ஒரு கதவு திறந்து கொண்டது. இதன் மூலம் 46 நர்ஸ்களும் மீட்கப்பட்டன. மற்றபடி இந்த மீட்பு நடவடிக்கை எப்படி, யார், யார் உதவியுடன் நடந்தது என்ற தகவல்களை வெளியிட முடியாது என்றார்.
செளதி உதவியதா?.. பணம் தரப்பட்டதா?
இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு செளதி அரேபியா உதவியிருக்கக் கூடும் என்று தெரிகிறது. மேலும் தீவிரவாதிகளுக்கு பணம் ஏதும் தரப்பட்டதா என்பது தெரியவில்லை. அடுத்த சில நாட்களில் இது தொடர்பான விவரங்கள் வெளியில் வரும் என்று தெரிகிறது.