உ.பி.யில் அடித்துக் கொல்லப்பட்டவரின் வீட்டில் இருந்தது மாடு அல்ல ஆட்டிறைச்சி: ஆய்வில் தகவல்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் மாட்டிறைச்சியை வீட்டு பிரிட்ஜில் வைத்திருந்ததுடன் சமைத்து சாப்பிடதாகக் கூறி அடித்துக் கொல்லப்பட்டார் முகமது அக்லாக் என்பவர். தடயவியல் பரிசோதனையில் அவர் வீட்டு பிரிட்ஜில் இருந்தது ஆட்டிறைச்சி என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கௌதம புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள தாத்ரியில் வசித்து வந்தவர் முகமது அக்லாக்(50). அவர் தனது வீட்டு பிரிட்ஜில் மாட்டிறைச்சியை வைத்திருந்ததுடன் அதை சமைத்து சாப்பிட்டதாக வதந்தி பரவியது. இதையடுத்து கடந்த 28ம் தேதி பிசாதா என்ற பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தாத்ரிக்கு வந்து முகமது அக்லாக் மற்றும் அவரின் மகனை வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து அடித்து நொறுக்கினர்.
இதில் அக்லாக் பலியானார், அவரது மகன் காயம் அடைந்தார். இந்த சம்பவத்தால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே போலீசார் அக்லாக் வீட்டு பிரிட்ஜில் இருந்த இறைச்சியை மதுராவில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
பரிசோதனையில் அது மாட்டிறைச்சி அல்ல மாறாக ஆட்டிறைச்சி என்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து அம்மாநில அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
நாங்கள் மட்டும் அந்த இறைச்சியை ஆய்வுக்கு அனுப்பி வைக்காமல் இருந்திருந்தால் உத்தர பிரதேச மாநில அரசு உண்மையை மறைப்பதாக எதிர்கட்சியினர் தெரிவித்திருப்பார்கள். எப்.ஐ.ஆரில் கூட மாட்டிறைச்சி என்று பதிவு செய்யப்படாத நிலையிலும் நாங்கள் இறைச்சியை ஆய்வுக்கு அனுப்பினோம் என்றார்.