நான் மாவோயிஸ்ட் என்பதை சுப்பிரமணிய சுவாமி நிரூபிக்க தயாரா?: மேதா பட்கர் ஆவேசம்
மும்பை: நான் மாவோயிஸ்ட் என்பதை சுப்பிரமணிய சுவாமி முதலில் நிரூபிக்க வேண்டும் என்று மும்பை லோக்சபா தொகுதி வேட்பாளர் மேதா பட்கர் கூறியுள்ளார்.
தீவிரவாதிகளான அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோருக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்கக் கூடாது என பிரபல சமூக சேவகரான மேதா பட்கர் தனது பேஸ்புக்கில் கருத்து தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக கருத்து கூறியிருந்த சுப்பிரமணிய சுவாமி, மேதாபட்கரை மாவோயிஸ்ட் என்று தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்குக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மேதா பட்கர், தனது பதிலில் கூறியுள்ளதாவது:
''பொதுவாக தூக்கு தண்டனை என்பதையே ரத்து செய்ய வேண்டும் என்பது எனது எண்ணம். தவறான செய்திகளை வெளியிட்டு என்னை அடிப்படைவாதி என்று கூறி என் மீது களங்கம் விளைவிக்க முயற்சி செய்வது சுப்பிரமணிய சுவாமி தான்.
மும்பை வடகிழக்கு தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் என் மீது வீண்பழி சுமத்தப்பட்டுள்ளது. என்னை மாவோயிஸ்ட் என்று சொன்ன சுப்பிரமணிய சுவாமி, முதலில் அதை நிரூபிக்க வேண்டும்.
அதே சமயம் மாவோயிஸ்டுகள் என்றும் தங்களை மாவோயிஸ்டு என ஒத்துக்கொள்ள மாட்டார்கள். எங்களை பொறுத்தவரை வன்முறை என்பது ஒரு மதிப்பு, அதை ஒரு போதும் தந்திரம் என கூறமுடியாது" என்று ஆவேசத்துடன் கூறியுள்ளார் மேதா பட்கர்.