தொடரும் சாதிய பாகுபாடு என தற்கொலைக்கு முயற்சித்த மாரிராஜ் கதறல்... கவனிக்குமா அரசுகள்?
குஜராத் மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் தமிழக மாணவர் மாரிராஜ் தொடர்ந்து தன்மீதான சாதிய பாகுபாடு தொடர்வதாக தெரிவித்துள்ளார்.
அஹமதாபாத் : அஹமதாபாத் மருத்துவக்கல்லூரியில் மருத்துவ உயர் படிப்பு படித்து வரும் நெல்லை மாணவர் மாரிராஜ் தற்கொலைக்கு முயற்சித்து உயிர் பிழைத்த நிலையில், தொடர்ந்து தன் மீது சாதி ரீதியில் பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறியுள்ளார். இதனால் தன்னுடைய படிப்பு கேள்விக்குறியாகியுள்ளதால் தமிழக கல்லூரிக்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் மாரிராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அஹமதாபாத்தின் பிஜே மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார் திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த மாரி ராஜ் என்ற இளைஞர். 3ம் ஆண்டு மருத்துவ உயர் படிப்பு படித்து வரும் மாரிராஜ், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் அஹமதாபாத்தின் பிஜே மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார் திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த மாரிராஜ் என்ற இளைஞர். 3ம் ஆண்டு மருத்துவ உயர் படிப்பு படித்து வரும் மாரிராஜ், கடந்த 6ம் தேதி தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மாணவர் மாரிராஜ் குற்றச்சாட்டு
சரியான நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் மாரிராஜ் உயிர்பிழைத்தார். தன் மீது கல்லூரியில் சாதிய பாகுபாடு காட்டப்படுவதாக மாரிராஜ் ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்தார். அறுவை சிகிச்சை தொடர்பாக படித்து வரும் மாரிராஜிற்கு அது தொடர்பான வகுப்புகளில் பங்கெடுக்க விடாமல் பேராசிரியர், மாணவர்களுக்கு டீ வாங்கிக் கொடுப்பது, டீ கிளாஸை கழுவி வைப்பது உள்ளிட்ட பணிகளை கொடுத்து நிர்வாகத்தினர் மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
அரசு விசாரிக்கவே இல்லை
மாரிராஜ் தற்கொலை குறித்து இது வரை தமிழக அரசு எந்த விசாரணையும் நடத்தவில்லை. வெளி மாநிலங்களில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னதோடு சரி இது வரை ஒரு அதிகாரியை அனுப்பி கூட மாரிராஜிற்கு நடந்தது என்ன என்று அரசு கேட்கவே இல்லை.
எதிராக செயல்படும் பேராசிரியர்கள்
இந்நிலையில் உயிர் பிழைத்துள்ள மாரிராஜ் தமிழ் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், நண்பர்கள் சரியான நேரத்தில் என்னை மருத்துவமனையில் அனுமதித்ததால் உயிர் பிழைத்துள்ளேன். உடல்நலன் தேறி 16 நாட்களாக வகுப்புகளுக்கு சென்றேன்.
ஆனால் அனைத்து பேராசிரியர்களும், துறைத் தலைவர்களும் சேர்ந்து மாரிராஜிற்கு எதிராக கையெழுத்து போட்டு இனி எனக்கு எந்த மருத்துவ பணியையும் ஒதுக்குவதில்லை என்று தெரிவித்துள்ளனர். நான் சொன்ன குற்றச்சாட்டுகள் பொய் என்று கூறி அனைவரும் கையெழுத்திட்டுள்ளனர்,இதனால் நான் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு தலையிட வேண்டும்
இந்த பாகுபாடுகள் தொடரும், என்னை தேர்வு எழுத அனுமதிப்பார்களா என்பது கூட தெரியவில்லை. எனவே அரசு தலையிட்டு என்னுடைய படிப்பை தொடர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாரிராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.