ம.பி. போலீஸ் தேர்வில் மீண்டும் சர்ச்சை... ஒரே அறையில் இரு பாலருக்கும் மருத்துவ பரிசோதனை செய்த அவலம்
மத்திய பிரதேசத்தில் போலீஸ் தேர்வுக்கான மருத்துவ பரிசோதனை ஒரே அறையில் இரு பாலருக்கும் செய்தனர்.
போபால்: மத்திய பிரதேசத்தில் காவலர் பணிக்கான மருத்துவ பரிசோதனையை ஒரே அறையில் இரு பாலருக்கும் செய்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் காவலர் பணிக்கான ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
பிந்த் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட இந்த பரிசோதனையின்போது ஆண், பெண் இருவருக்கும் ஒரே அறையில் சோதனை நடத்தப்பட்டது. ஆண்கள் வரிசையில் உள்ளாடையுடன் நின்று கொண்டு அவர்களது உயரம் மற்றும் மார்பளவு எடுக்கப்பட்டது.
பெண் மருத்துவர்கள்
அதே இடத்தில் பெண்களுக்கும் உயரம் மற்றும் மார்பளவு எடுக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. மேலும் அந்த மருத்துவமனையில் பெண் மருத்துவர்கள் யாரும் இல்லை. ஆண் மருத்துவர்களே பெண்களுக்கும் சோதனை செய்தனர்.
அனைத்து குழுவுக்கும்
இது தொடர்பாக புகாரின் பேரில் பிந்த் மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட அனைத்து மருத்துவ குழுவுக்கு நாங்கள் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளோம்.
பெண் மருத்துவர்கள்
மாவட்ட மருத்துவமனையில் மொத்தம் 4 பெண் மருத்துவர்கள் உள்ளனர். அவர்களில் 3 பேர் மருத்துவ விடுப்பில் உள்ளனர். இதனால் மேலும் ஒரு மருத்துவர் மற்றும் ஒரு செவிலியரை மருத்துவ பரிசோதனை நடைபெறும் இடத்தில் நிறுத்தியுள்ளோம் என்று தெரிவித்தனர்.
இரு அதிகாரிகள் சஸ்பெண்ட்
மத்திய பிரதேச மாநிலம், தார் மாவட்டத்தில் போலீஸ் காவலர் பணிக்கான தேர்வின்போது மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டவர்களின் மார்பில் அவரவர் சமூக குறியீட்டை எழுதியது தொடர்பாக இரு நாட்களுக்கு முன்னர் பெரும் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக இரு அதிகாரிகள் இருவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.