பெண்களே இது புது டெக்னிக்.. செல்ஃபி ஆசைகாட்டி மனைவியை ஆற்றுக்குள் தள்ளி கொன்ற கணவன்
மீரட்: செல்போனில் செல்ஃபி போட்டோ எடுப்பதாக ஏமாற்றி மனைவியை ஆற்றில் தள்ளி கொன்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த அஃப்டாப் (30) என்பவர், தனது மனைவி ஆயிஷாவை (24) வர தட்சணை கேட்டு கொடுமை செய்து வந்துள்ளார்.
ஒருகட்டத்தில் பணம் தேறாது என்று தெரிந்ததும், ஆயிஷாவை கொலை செய்ய திட்டமிட்ட அஃப்டாப், மனைவியிடம் நைசாக பேசி, அன்பாக இருப்பதை போல நடித்துள்ளார்.
கங்கை ஆற்றுக்கு மனைவியை கூட்டி சென்ற அஃப்டாப், அதன் முன் நின்று செல்ஃபி எடுக்கலாம் என்று கூறியுள்ளார். கணவன் கூப்பிட்டதால் ஆசையாக சென்று செல்ஃபிக்கு போஸ் கொடுத்துள்ளார் ஆயிஷா.
இதையடுத்து, எதிர்பாராத நேரத்தில் ஆயிஷாவை ஆற்றில் தள்ளி கொலை செய்துள்ளார் அஃப்டாப். இதுகுறித்து ஆயிஷாவின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில், அஃப்டாபை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலில் போலீசாரை திசை திருப்பும் வகையில் கதை கட்டியுள்ளார் அஃப்டாப். எங்களிடம் சிலர் கொள்ளை அடிக்க முயன்றனர். அப்போது, எனது மனைவியை அவர்கள் ஆற்றினுள் தள்ளி விட்டனர் என போலீசாரிடம் அஃப்டாப் கூறினார்.
ஆனால் ஆயிஷாவின் அண்ணன் தனக்கு அஃப்டாப் மீதுதான் சந்தேகம் இருப்பதாக உறுதியாக கூறியதை தொடர்ந்து, போலீசார் உரிய வகையில் விசாரணை நடத்தினர். அப்போது கொலை செய்ததை அஃப்டாப் ஒப்புக்கொண்டார். ஆற்றினுள் இருந்து ஆயிஷாவின் சடலத்தை மீட்டுள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.