யோகி ஆதித்யநாத் போல் ஹேர்ஸ்டைல்!, நோ 'நான்வெஜ்'... உ.பி. தனியார் பள்ளியின் அக்கப்போர்!
முதல்வர் யோகி ஆதித்யநாத் போல சிகையலங்காரம் செய்து கொண்டால் மட்டுமே பள்ளிக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று உத்தரப்பிரதேசத்தில் தனியார் பள்ளி ஒன்று பிறப்பித்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளத
லக்னோ : உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போல ஹேர்ஸ்டைல் வைத்துக் கொண்டால் மட்டுமே மாணவர்கள் வகுப்பிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அம்மாநிலத்தில் தனியார் பள்ளி ஒன்று பிறப்பித்த உத்தரவால் பெற்றோர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீரட்டின் சர்தார் பகுதியில் இயங்கி வரும் ரிஷன் அகாடமி பள்ளி, தங்கள் மாணவர்களுக்கு ஒரு அதிரடி உத்தரவிட்டுள்ளது. அதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் போல முடி வெட்டிக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் அந்த ஹேர்ஸ்டைலை செய்து கொள்ளாத வரை வகுப்பிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் தீயாக பரவ அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பள்ளி வளாகத்தின் முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் பள்ளிக்கு அசைவ உணவை எடுத்து வரக்கூடாது என்று வற்புறுத்துவதாகவும் மாணவர்கள் சிலர் பள்ளியின் மீது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். ஆனால் பெற்றோர் மற்றும் மாணவர்களின் குற்றச்சாட்டுகளை பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது.
இருப்பினும் மாணவர்கள் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதை புகட்டும் விதமாக நல்ல ஆடை மற்றும், ஹேர்ஸ்டைல் செய்து கொள்ள வேண்டும் என்று மட்டுமே உத்தரவிட்டதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். பள்ளியில் அசைவ உணவை உட்கொள்ளும் விவகாரத்தில் எப்போதுமே சர்ச்சை நிலவுவதாகவும், இதற்கு பாஜக சாயம் பூச வேண்டாம் என்றும் பள்ளி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.