ஒசாமா பின் லேடனை தெரியும், மேற்கு வங்கத்தின் பின் லேடனை தெரியுமா?
கொல்கத்தா: முசாபல் ஹக்கை மேற்கு வங்கத்தின் பின் லேடன் என்கிறார்கள். புர்த்வான் குண்டுவெடிப்பு வழக்கில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முசாபல் ஹக் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியதில் மாநில அரசின் அங்கீகாரம் இல்லாமல் நடத்தப்படும் மதரஸாக்கள் தீவிரவாத செயல்களுக்கு எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பது தெரிய வந்துள்ளது.
ஹக்கை அவரது கூட்டாளிகள் பின் லேடன் என்று அழைக்கிறார்கள். அவரை விசாரித்ததில் புர்த்வான் குண்டுவெடிப்பு வழக்கில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது.
யார் இந்த முசாபல் ஹக்?
52 வயதாகும் முசாபல் ஹக் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள முகிம்நகரைச் சேர்ந்தவர். முகிம்நகரில் அங்கீகரிக்கப்படாத மதரஸா நடத்தி வந்த அவருக்கும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஜமாத்துல் முஜாஹிதீன் அமைப்புக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று கூறப்படுகிறது.
ஜமாத்துல் முஜாஹிதீன் மூலமாக ஹக்கிற்கு வங்கதேசத்தைச் சேர்ந்த ஷேக் ரஹ்மத்துல்லாவுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. ஹக்கின் மதரஸாவை ஷேக் ஜமாத்துல் முஜாஹிதீன் அமைப்பின் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த துவங்கினார்.
அந்த மதரஸாவில் ஹக் மற்றும் ஷேக் சேர்ந்து ஜமாத்துல் முஜாஹிதீனுக்கு ஆட்களை சேர்த்ததுடன், அவர்களுக்கு பயிற்சியும் அளித்துள்ளனர்.
அது என்ன பின் லேடன்?
ஹக்கின் கூட்டாளிகள் மட்டும் அல்ல அவருடைய கிராமத்தினர் அனைவருமே அவரை பின் லேடன் என்றே அழைக்கிறார்கள். அவரது சிந்தனைகள் முதல் உடை வரை அனைத்தும் பின் லேடனை நினைவுபடுத்துகிறது. பின் லேடனை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று ஹக் தெரிவித்துள்ளார்.
ஜிஹாத்துக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளதாகவும், தன்னுடைய மதத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் போரிடத் தயங்க மாட்டேன் என்றும் ஹக் தெரிவித்துள்ளார். ஷரியா சட்டத்தை அமல்படுத்த விரும்புகிறார் ஹக். அதனால் தான் வங்கதேசத்தில் ஷரியா சட்டத்தை அமல்படுத்த துடிக்கும் ஜமாத்துல் முஜாஹிதீனுக்கு அவர் உதவி செய்ய முடிவு செய்தார்.
அவர் நீளமான தாடி வைத்து பின் லேடனைப் போன்றே ஆடை அணிகிறார். பெண்கள் அனைவரும் பர்தா அணிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர் ஷரியா சட்டத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்கிறார்.
சட்டவிரோத மதரஸாக்கள்
மதரஸாக்கள் பற்றி தவறான கருத்து உள்ளது. அரசு அங்கீகாரம் பெற்று நடக்கும் மதரஸாக்களால் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் சிமுலியா மற்றும் முகிம்நகரில் செயல்பட்டு வரும் அங்கீகாரம் இல்லாத மதரஸாக்களால் தான் பிரச்சனை.
ஹக் முகிம்நகரில் 2011ம் ஆண்டு மதரஸாவை துவங்கினார். அவர் மாநில அரசின் அங்கீகாரம் இல்லாமல் மதரஸாவை துவங்கினார். அவருக்கு அரசிடம் இருந்து நிதி வரவில்லை. அந்த மதரஸாவும் கண்காணிக்கப்படவில்லை.
சட்டவிரோதமாக துவங்கப்படும் மதரஸாக்களை கட்டுப்படுத்த மேற்கு வங்க மாநில அரசு தவறிவிட்டது. இந்த மதரஸாக்கள் தீவிரவாதிகள் மேற்கு வங்கத்தில் கடைகள் துவங்க உதவி செய்தன.