யார் பெரியவர்?.. சாய்பாபாவா, சங்கராச்சாரியாரா... உ.பியில் சாதுக்கள் கூடி விவாதிக்கிறார்கள்!
சம்பல், உ.பி: ஷீரடி சாய்பாபா மற்றும் துவாரகா சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி ஆகிய இருவரில் யார் பெரியவர்கள், யார் சரி என்பது குறித்து விவாதிக்க உ.பி. மாநிலம் சம்பல் பகுதியில் நவம்பர் மாதம் சாதுக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
சாய்பாபா பக்தர்களுக்கும், சங்கராச்சாரியா பக்தர்களுக்கும் இடையே சமீப காலமாக மோதல் வலுத்து வருகிறது.
19வது நூற்றாண்டைச் சேர்ந்த ஷீரடி சாய்பாபாவை கடவுளாக வழிபடக் கூடாது, அவர் கடவுள் அல்ல என்று சங்கராச்சாரியார் கூறியதால் சாய் பக்தர்கள் கொந்தளிப்படைந்தனர்.
கோவில்களில் வழிபாடு கூடாது
இதுகுறித்து சங்கராச்சாரியார் ஒரு பேட்டியின்போது கூறுகையில், சாய்பாபா கடவுள் அல்ல. அவரைக் கோவில்களில் சிலைகள் வைத்து வழிபாடு செய்வது தவறு. அவரது புகைப்படங்களை வைத்து வழிபடுவது தவறு என்று கூறினார்.
இவர் யார் சொல்வதற்கு
90 வயதான சங்கராச்சாரியாரின் இந்தக் கூற்றுக்கு சாய் பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் வாரணாசியில் போராட்டத்தில் குதித்தனர். அதேசமயம், சங்கராச்சாரியாரின் பக்தர்களும் எதிர்ப்புத் தெரிவித்துக் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொடும்பாவி எரிப்பு
சாய் பக்தர்கள், சங்கராச்சாரியாரின் கொடும்பாவியை தீவைத்து எரித்தனர்.
காங்கிரஸ் ஆதரவாளர்
துவாரகா சங்கராச்சாரியார், காங்கிரஸ் ஆதரவாளராக திகழ்பவர் ஆவார். இவரை பாஜகவினருக்கும் பிடிக்காது. இவர் பாஜக தலைவர் உமா பாரதியையும் கூட முன்பு விமர்சித்தவர் ஆவார். உமா பாரதி குறி்த்து இவர் கூறுகையில், உமா பாரதி ராம பக்தர் என்று நினைத்திருந்தேன். அவர் ராமர் கோவிலைக் கட்ட உதவுவார் என்றும் நினைத்திருந்தேன். ஆனால் அவரோ முஸ்லீம் ஒருவரின் பக்தர் என்பது பின்னர்தான் எனக்குத் தெரிய வந்தது என்று கூறியிருந்தார். முஸ்லீ் என்று இவர் கூறியது சாய்பாபாவை என்பது குறிப்பிடத்தக்கது.
சாதுக்கள் கூட்டம்
இந்த நிலையில் சங்கராச்சாரியார், சாய்பாபா ஆகியோரில் யார் பெரியவர், யார் சரியானவர், யார் மக்களுக்கும், ஆன்மீகத்திற்கும் பொருத்தமானவர் என்பதை முடிவு செய்ய சாதுக்கள் கூட்டம் ஒன்றுக்கு அகில பாரதிய சாதுக்கள் சமிதி அழைப்பு விடுத்துள்ளது.
சம்பல் நகரில்
நவம்பர் 1ம் தேதி உ.பி மாநிலம் சம்பல் நகரில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்று அமைப்பின் தலைவரான ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணன் கூறியுள்ளார்.