என்னா கூட்டம்.. பல லட்சம் பேராவது இருப்பார்கள்.. வாரணாசியில் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு
Recommended Video
வாரணாசி: "நானாக இங்கு வரவில்லை.. கங்கை மாதா என்னை இங்கு அழைத்து வந்தார்.." இதுதான், 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது, வாரணாசி (காசி) தொகுதியில் போட்டியிட சென்றபோது, பிரதமர் நரேந்திர மோடி கூறிய வார்த்தைகள்.
இப்போது, 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மீண்டும், வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார், நரேந்திர மோடி. வெற்றி பெற்றேயாக வேண்டும் அதுவும், மெகா ஓட்டு வித்தியாசத்தில் என்ற எண்ணத்தில் உள்ள, நரேந்திர மோடி, நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
சாதாரணமாக அவர் வேட்புமனுவை தாக்கல் செய்யப்போவதில்லை. விஐபி வீட்டு கல்யாணம் போல வெகு தடபுடலாக, இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
பிரதமர் மோடி மீது விதிமீறல் புகார் மாயம்... 'சிறிய தடுமாற்றம்' என சமாளித்த தேர்தல் ஆணையம்
திருமண கோலாகலம்
அதுவும் பஞ்சாப் வீட்டு கல்யாணங்கள் போல முன்கூட்டியே கோலாகலங்கள் தொடங்குகின்றன. ஆம், நாளைதான் வாரணாசியில் பிரதமர் மோடி, வேட்புமனு தாக்கல் செய்கிறார் என்றபோதிலும், இன்றே, வாரணாசியில் பெரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று மதியம் 2 மணிக்கு, வாரணாசியின் பபட்பூர் ஏர்போர்ட் வந்திறங்கிய மோடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்கு ஹெலிகாப்டரில் சென்று இறங்கினார்.
ரோடு ஷோ
பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பிக்கிறது, திருவிழா. ஆம்.. அங்கிருந்து திறந்த வாகனத்தில் ரோடு ஷோ நடத்த ஆரம்பித்துள்ளார் மோடி. லன்கா பகுதியில் இருந்து தஷாவமேத் காட் பகுதி வரை கோடோலியா வழியாக இந்த ரோடுஷோ சுமார் 6 கி.மீ தூரத்திற்கு செல்கிறது. மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், நிதின் கட்கரி, பியூஷ் கோயல் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகிய சீனியர் அமைச்சர்களும், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும், இந்த ரோடு ஷோவில் பங்கேற்கிறார்கள்.
பல மாநில முதல்வர்கள்
பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும், இந்த ரோடு ஷோவில் பங்கேற்றுள்ளனர். அது மட்டுமா, தேசிய ஜனநாயக கூட்டணியிலுள்ள கட்சி தலைவர்களான ஷிரோன்மணி அகாளி தள தலைவர் பிரகாஷ் சிங் பாதல், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, பீகார் முதல்வர் நிதீஷ் குமார், லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோரும் இந்த ரோடு ஷோவில் பங்கேற்றுள்ளனர்.
மலர் தூவி வாழ்த்து
வழிநெடுகிலும், நரேந்திர மோடி மீது மலர் தூவி அவரை வரவேற்க பாஜக தொண்டர்கள் காத்திருக்கிறார்கள். சுமார் 6 லட்சம் பேர் இந்த ரோடுஷோவில் பங்கேற்றுள்ளனர். இந்த பிரமாண்ட பேரணியை முடித்த பிறகு, கங்கா ஆரத்தி தரிசனம் செய்கிறார், மோடி. பின்னர், புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்யும் மோடி, பிறகு, வாரணாசியிலுள்ள நட்சத்திர ஹோட்டலில், 3000 முக்கிய புள்ளிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
வேட்புமனு தாக்கல்
இதன்பிறகு, நாளை காலை, காசியிலுள்ள கால பைரவர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து ஆசி பெறும் மோடி, பாஜக பூத் மட்டத்திலான நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டு பிறகு, தேர்தல் அலுவலகம் சென்று, வேட்புமனு தாக்கல் செய்கிறார். வாரணாசி தொகுதியில், மே 19ம் தேதி, தேர்தல் நடைபெற உள்ளது. அதுதான் 7வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் நடைபெறும் நாள் என்பது குறிப்பிடத்தக்கது.