மேகாலயாவில் தங்க அரசின் அனுமதி தேவை... புதிய சட்டம்
ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தில் அரசின் அனுமதி பெறாமல் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் மேகாலயவிற்கு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் செல்லும் நிலையில் அம்மாநில அரசு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
மேகாலயா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள சட்டத்திருத்த மசோதாவால் நினைத்த நேரத்தில் அங்கு யாரும் சென்று தங்கிக்கொள்ள முடியாது.
வடகிழக்கு மாநிலம்
இயற்கை எழில் சூள ரம்மியமாக காட்சியளிக்கும் மேகாலயா மாநிலத்தில் பழங்குடியின மக்கள் தான் முழுவதும் வசித்து வருகின்றனர். மேகங்கள் திரண்டு தலையை கோதி செல்லும் அழகே அழகு தான். சுற்றுலாப் பிரியர்களின் சொர்க்கபுரியாக திகழும் மேகாலயாவில் இனி ஒரு நாளுக்கு மேல் தங்க வேண்டும் என்றால் அதற்கு அம்மாநில அரசின் அனுமதி பெற வேண்டும் என சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அமைச்சரவை ஒப்புதல்
மேகாலயா குடியிருப்போர் பாதுகாப்புச் சட்டம் 2016-ல் அம்மாநில அரசு திருத்தம் செய்துள்ளதோடு, சட்ட விரோத குடியிருப்பை தடுக்க பல புதிய பிரிவுகளையும் சேர்த்துள்ளது. அதன்படி ஒரு நாளுக்கு மேல் அங்கு தங்க வேண்டும் என்றால், விவரங்களை அரசிடம் முன் கூட்டியே தெரிவித்து முன் பதிவு செய்ய வேண்டும்.
அரசு அதிகாரிகள்
வெளி மாநில அரசு அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள், ஆகியோர் தங்களின் விவரங்களை தெரிவித்து முன் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. அதிகாரிகளுக்கு மட்டும் மேகாலயா அரசு விதி விலக்கு அளித்துள்ளது. அதனால் அவர்கள் சிரமமின்றி மேகாலயாவில் தங்கி சுற்றிப்பார்க்க முடியும்.
அமைச்சரவை ஒப்புதல்
மேகாலயா குடியிருப்போர் பாதுகாப்புச் சட்டம் காங்கிரஸ் அரசின் போது கொண்டுவரப்பட்டது. அதில் திருத்தங்கள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு மேகாலயா அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.