மேகாலயா சட்டசபை தேர்தல்: குண்டுவெடிப்பில் தேசியவாத காங். வேட்பாளர் உட்பட 4 பேர் பலி
மேகாலயா சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது தனிநாடு கோரும் தீவிரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் உட்பட 4 பேர் பலியாகினர்.
ஷில்லாங்க்: மேகாலயா சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது தனிநாடு கோரும் தீவிரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் உட்பட 4 பேர் பலியாகினர்.
மேகாலயா மாநில சட்டசபைக்கு வரும் 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் தீவிர தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
வில்லியம்நகர் தொகுதி தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ஜோனாதோன் என் சங்மா நேற்று மாலை பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது வாகனம் செல்லும் பாதையில் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பை நடத்தினர்.
இதில் ஜோனாதோன் என் சங்மா உட்பட 4 பேர் பலியாகினர். மேகாலாயாவின் மேற்கு பகுதியை பிரித்து காரோலாந்த் தனிநாடு கோரும் காரோ தேசிய விடுதலை ராணுவமே இத்தாக்குதலுக்கு காரணம் என கூறப்படுகிறது. இச்சம்பவத்துக்கு மாநில முதல்வர் முகுல் சங்மா கடும் அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித்துள்ளார்.