செக்ஸ் புகார் எதிரொலி- மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் ராஜினாமா: பிடிஐ தகவல்
பாலியல் தொந்தரவு புகாரில் சிக்கிய மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் தம்முடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
ஷில்லாங்க்: பாலியல் தொந்தரவு புகாரில் சிக்கிய மேகாலயா ஆளுநரான தமிழகத்தைச் சேர்ந்த சண்முகநாதன் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
மேகாலயா ஆளுநராக 2015-ல் நியமிக்கப்பட்டவர் தமிழகத்தைச் சேர்ந்த சண்முகநாதன். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த பிரமுகர்தான் சண்முகநாதன் என ஊடகங்கள் சுட்டிக்காட்டி வருகின்றன. மேகாலயா ஆளுநராக இருந்த சண்முகநாதன் அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களுக்கு கூடுதல் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.
கடந்த 24-ந் தேதியன்று மேகாலயா ராஜ்பவன் மக்கள் செய்தி தொடர்பாளர் பதவிக்கான நேர்காணலுக்கு வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முதலில் செய்திகள் வெளியானது. இதைத் தொடர்ந்து ராஜ்பவன் ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் 5 பக்க கடிதம் ஒன்றை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைத்திருந்தனர். அதில் 11 விவகாரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
ராஜ்பவனை இளம்பெண்கள் கிளப்பாகவே சண்முகநாதன் மாற்றியது; சின்மோயி தேகா என்ற பெண்ணுடனான நெருக்கம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அதில் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து சண்முகநாதன் ராஜினாமா செய்ய கோரி மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் போராட்டங்கள் வெடித்தன.
#Meghalaya Governor #VShanmuganathan resigns: Sources.
— Press Trust of India (@PTI_News) January 26, 2017
இந்த நிலையில் சண்முகநாதன், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்று பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.