300 அடி ஆழ சுரங்கத்தில் புகுந்த தண்ணீர்.. சிக்கிய 14 பேர்.. 12 நாட்களாக நடக்கும் உயிர் போராட்டம்!
மேகாலயாவில் 12 நாட்களுக்கு முன் சுரங்கத்தில் சிக்கிய 14 ஊழியர்களை இன்னும் மீட்க முடியாமல் மீட்பு படையினர் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
Recommended Video
ஷில்லாங்: மேகாலயாவில் 12 நாட்களுக்கு முன் சுரங்கத்தில் சிக்கிய 14 ஊழியர்களை இன்னும் மீட்க முடியாமல் மீட்பு படையினர் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
தாய்லாந்து குகைக்குள் கடந்த ஜூன் மாதம் 12 சிறுவர்கள் உட்பட 13 பேர் சிக்கிக் கொண்டனர். இவர்களை 18 நாட்கள் போராட்டத்திற்கு பின் வெற்றிகரமாக மீட்பு படையினர் மீட்டனர்.
தற்போது அதேபோல் மேகாலயாவில் சுரங்கம் ஒன்றில் 14 பேர் சிக்கி இருக்கிறார்கள். அங்குள்ள மேற்கு ஜெயின்டிஷியா மலையில் இருக்கும் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் சிக்கி இருக்கும் ஊழியர்களை மீட்க பெரிய போராட்டம் நடந்து வருகிறது.
சுரங்கம் உள்ளது
மேகாலயாவில் நிறைய சுரங்கங்கள் உள்ளது. ஆனால் ஏற்கனவே அங்கு ஹைகோர்ட், சுரங்கங்களை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும் மேகாலயாவில் அனுமதியின்றி நிறைய சுரங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான், ஜெயின்டிஷியா மலையில் இருக்கும் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் புகுந்ததால் மாட்டினார்கள்
கடந்த 12ம் தேதி அந்த நிலக்கரி சுரங்கத்தில் ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருந்த போது திடீர் என்று தண்ணீர் புகுந்தது. அந்த சுரங்கம் 300 அடி ஆழம் கொண்டது. அருகே இருக்கும் லேடெயின் நதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இந்த குகைக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் குகைக்குள் இருந்த 14 பேரும் நீரில் சிக்கினார்கள்.
மீட்பு படை களமிறங்கியது
இவர்களை மீட்க உடனடியாக மீட்பு படையினர் களமிறங்கினர். ஆனால் மீட்பு பணிகளை சரியாக செய்ய முடியவில்லை. சுரங்கத்தில் தொடர்ந்து நீரின் அளவு அதிகரித்துக் கொண்டே சென்றது. ஊழியர்களும் எங்கே இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது.
தண்ணீர் எடுக்கிறார்கள்
இதையடுத்து சுரங்கத்திற்குள் இருக்கும் தண்ணீரை நிறைய ''போர்வெல்'' போட்டு வெளியே எடுத்தனர். 100 அடியில் இருந்து தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்பட்டது. ஆனால் 70 அடி வரை இப்போது இன்னும் தண்ணீர் இருக்கிறது.
ஆனால் சிக்கல்
அருகருகே இருக்கும் மற்ற சுரங்கங்கள் மூலம் இந்த சுரங்கத்திற்குள் தண்ணீர் வருகிறது. இதனால் சுற்றி ஐந்து கிமீ பகுதியில் இருக்கும் அனைத்து சுரங்கத்தின் தண்ணீரையும் வேகமாக ஒரே நேரத்தில் எடுக்க வேண்டும். இதை செய்ய எப்படியும் ஒரு மாதம் ஆகும் என்று கூறுகிறார்கள். இதனால் அங்கிருக்கும் ஊழியர்களை மீட்பதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
12 நாட்களாக மீட்பு பணி
இந்த மீட்பு பணி 12 நாட்களாக நடந்து வருகிறது. 100 ஊழியர்கள் இதில் மீட்பு பணி செய்து வருகிறார்கள். 250 தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அதேபோல் 22 மீட்பு குழுக்களை மேகாலயா அரசு அனுப்பி உள்ளது. 8 டைவர்கள் இதற்காக களமிறக்கப்பட்டு உள்ளனர்.
எதுவுமே இதுவரை நடக்கவில்லை
ஆனால் இத்தனை பேர் பணியாற்றியும் இதுவரை ஒருவரை கூட மீட்க முடியவில்லை. உள்ளே முழுக்க முழுக்க தண்ணீர் நிரம்பி இருப்பதால் யாரையும் இதுவரை மீட்க முடியவில்லை. அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற விவரம் கூட இதுவரை வெளியாகவில்லை என்பதுதான் மிகவும் வருத்தமான விஷயம்.
பெரிய அச்சம்
இதனால் இவர்கள் அனைவரும் பலியாகி இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். இதுவரை ஒரேயொரு ஹெல்மெட் மட்டுமே மீட்கப்பட்டு இருக்கிறது. இந்த சுரங்க உரிமையாளர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.