உடைந்து விழும் உடல்கள்.. புதிய சிக்கலில் மீட்பு படையினர்.. கலங்க வைக்கும் மேகாலயா சுரங்க விபத்து!
மேகாலயாவில் சுரங்கத்தில் சிக்கி இருக்கும் பணியாளர்களின் உடல்களை மீட்பதில் புதிய சிக்கல் உருவாகி உள்ளது.
Recommended Video
ஷில்லாங்: மேகாலயாவில் சுரங்கத்தில் சிக்கி இருக்கும் பணியாளர்களின் உடல்களை மீட்பதில் புதிய சிக்கல் உருவாகி உள்ளது. சுரங்கத்தில் இருக்கும் உடல்களை மீட்கும் போதே உடல்களின் பாகங்கள் உடைந்து விழுவதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
ஒரு மாதம் முன் மேகாலயாவின் ஜெயின்டிஷியா மலையில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில்தான் இந்த விபத்து ஏற்பட்டது. அங்கு இருக்கும் ஜெயின்டிஷியா மலையில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருந்த போது திடீர் என்று சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்தது.
இதனால் கடந்த டிசம்பர் 12ம் தேதி குகைக்குள் இருந்த 15 பேரும் நீரில் சிக்கினார்கள். இதுவரை ஒருவர் கூட அங்கிருந்து மீட்கப்படவில்லை.
மிக மோசம்
இவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. அந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படையின் Underwater Remotely Operated Vehicle எனப்படும் சிறிய ரோபோட் மோட்டார் வாகனம் மூலம் இவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கோரிக்கை
இந்த நிலையில் அந்த சுரங்கத்தில் சிக்கி இருக்கும் பணியாளர்களின் உறவினர்கள், எங்களுக்கு குறைந்தபட்சம் சிக்கி இருப்பவர்களின் உடல்களையாவது மீட்டு கொடுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர். நாங்கள் இறுதி சடங்கு செய்யவாவது எங்களுக்கு உடல்களை மீட்டு கொடுங்கள். அந்த உதவியாவது செய்யுங்கள் என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.
மோசம்
இந்த நிலையில் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் பணியாளர்கள் இதுகுறித்து சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்கள். அதன்படி அங்கு சிக்கி இருக்கும் உடல்களை எடுப்பதும் கூட மிகவும் சிரமம் என்று கூறியுள்ளனர். அந்த உடல்கள் இரண்டு வாரத்திற்கும் மேல் உள்ளே இருப்பதால் கயிறு கட்டி வெளியே எடுக்கும் நிலையில் இல்லை என்று கூறி உள்ளனர்.
உடைந்து விழுந்தது
அதேபோல் கண்டுபிடிக்கப்பட்ட உடலை எடுக்கவே பெரிய சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த உடலை 210 அடியில் இருந்து 100 அடிக்கு கொண்டு வருவதற்குள் பல பாகங்கள் உடைந்து விழுந்ததாக கூறியுள்ளனர். உடலில் உள்ள பல பாகங்கள் உடைந்து விழுந்தது என்று கூறப்படுகிறது. இதனால் முழுமையான மருத்துவ ஆலோசனைக்கு பின்பே உடல்களை மீட்க போகிறோம் என்று கூறியுள்ளனர்.