பம்ப் இல்லை.. அதனால் மீட்கவில்லை.. மேகாலயா சுரங்கத்தில் சிக்கிய 14 பேரை மீட்கும் பணி நிறுத்தம்!
ஷில்லாங்: மேகாலயா சுரங்கத்தில் சிக்கி இருக்கும் 14 ஊழியர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேகாலயாவில் நிறைய சுரங்கங்கள் உள்ளது. இந்த நிலையில் கடந்த 12ம் தேதி மேகாலயாவின் ஜெயின்டிஷியா மலையில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருந்த போது திடீர் என்று சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்தது.
அந்த சுரங்கம் 300 அடி ஆழம் கொண்டது. அருகே இருக்கும் லேடெயின் நதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இந்த குகைகள் தண்ணீர் புகுந்தது.
மொத்தமாக சிக்கினார்கள்
இதனால் குகைக்குள் இருந்த 14 பேரும் நீரில் சிக்கினார்கள். மேகாலயாவில் 18 நாட்களுக்கு முன் சுரங்கத்தில் சிக்கிய 14 ஊழியர்களை இன்னும் மீட்க முடியாமல் மீட்பு படையினர் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இவர்களை மீட்க மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் போராடி வருகிறார்கள்.
தண்ணீர் பிரச்சனை
இதையடுத்து சுரங்கத்திற்குள் இருக்கும் தண்ணீரை ''போர்வெல்'' போட்டு வெளியே எடுத்து வந்தனர். 100 அடியில் இருந்து தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்பட்டது. ஆனால் 70 ஆடி வரை இப்போதும் தண்ணீர் இருக்கிறது. அருகருகே இருக்கும் மற்ற சுரங்கங்கள் மூலம் இந்த சுரங்கத்திற்குள் தண்ணீர் தொடர்ந்து வருகிறது.
கஷ்டம் ஆனது
இதனால் சுரங்கத்திற்குள் உள்ள தண்ணீரை வெளியே எடுப்பது மிகவும் சிரமமாக உள்ளது. 16 நாட்களாக முயன்றும் 70 அடி தண்ணீரை இன்னும் அகற்ற முடியவில்லை. அதே 70 அடியில் தண்ணீர் இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் அதிகாரிகள் குழம்பி வருகிறார்கள்.
போர் இல்லை
மேலும் தற்போது இருக்கும் பம்ப்களை வைத்து நீரை வெளியேற்ற முடியாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் சுரங்கத்தில் சிக்கி இருக்கும் 14 ஊழியர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக 14 ஊழியர்களை மீட்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
வந்த பின்
புதிய திறன் கொண்ட பம்ப் வந்த பின்பே மீட்பு பணி நடக்கும் என்று கூறியுள்ளனர். மத்திய தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு இதுவரை புதிய பம்பை கொடுக்கவில்லை என்று அங்கிருக்கும் அதிகாரிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இதனால்தான் மீட்பு பணியை செய்ய முடியவில்லை என்று கூறி இருக்கிறார்கள்.
நிலை என்ன
சுரங்கத்தில் சிக்கிய பணியாளர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. இதுவரை ஒருவரை கூட மீட்க முடியவில்லை. அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற விவரம் கூட இதுவரை வெளியாகவில்லை. இவர்கள் அனைவரும் பலியாகி இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.