ஜம்மு காஷ்மீரில் பி.டி.பி.- பா.ஜ.க. கூட்டணி அரசு? ஆளுநர் வோராவுடன் மெஹ்பூபா முப்தி சந்திப்பு!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநர் வோராவை மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி.) தலைவர் மெஹ்பூபா முப்தி இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இம்மாநிலத்தில் பி.டி.பி.- பா.ஜ.க. கூட்டணி அரசு அமையக் கூடும் எனக் கூறப்படுகிறது.
87 இடங்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சியும் பெரும்பான்மையை பெறவில்லை. 28 இடங்களை கைப்பற்றிய மக்கள் ஜனநாயகக் கட்சியும்(பி.டி.பி.) 25 இடங்களை வென்ற பாரதிய ஜனதாவும் கூட்டணி அமைப்பது குறித்து பல சுற்று பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன.
ஜம்மு காஷ்மீரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவு நீடிப்பது, ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்டவற்றை பா.ஜ.க. ஏற்க வேண்டும் என்று பி.டி.பி. நிபந்தனைகளை விதித்தது. ஆனால் பா.ஜ.க. இதனை ஏற்கவில்லை.
மேலும் பி.டி.பி. கட்சி எம்.எல்.ஏக்கள் பலரும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அரசு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கினர். காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் எந்த ஒரு கட்சியுமே பாரதிய ஜனதாவுடன் கூட்டணி ஆட்சி அமைக்கவே கூடாது என்று போராட்டங்களும் வெடித்தன.
இதனால் பி.டி.பி.- தேசிய மாநாட்டு கட்சி (என்.சி.) மற்றும் காங்கிரஸ் ஆகியவை இணைந்து மெகா கூட்டணி அரசை அமைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டன.
இந்த நிலையில் பி.டி.பி,. தலைவர் மெஹ்பூபா முப்தி இன்று ஆளுநர் வோராவை சந்தித்து ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
இருப்பினும் ஜம்மு காஷ்மீரில் பி.டி.பி.- பா.ஜ.க. கூட்டணி அரசுதான் அமையும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒன் இந்தியாவுக்கு கருத்து தெரிவித்த பா.ஜ.க. வட்டாரங்கள், ஜம்மு காஷ்மீர முதல்வராக பி.டி.பி.யின் முப்தி முகமது சயீத் 6 ஆண்டுகாலமும் நீடிக்க ஒத்துழைப்பு தருவோம். கூட்டணி ஆட்சி அமைந்தால் பா.ஜ.க.வின் நிர்மல் சிங், துணை முதல்வராக்கப்படலாம் என்றும் கூறின.
மேலும் பி.டி.பி.- என்.சி.- காங்கிரஸ் கூட்டணி அரசு அமையும் என்று வெளியான செய்திகள் தவறானவை.. அப்படி ஒரு கூட்டணி ஆட்சி அமைவது ஜம்மு காஷ்மீர மக்களுக்கு செய்கிற துரோகம் என்றும் பா.ஜ.க. தலைவர்கள் கூறியுள்ளனர்.