பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளுங்கள்.. காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு மெகபூபா அழைப்பு
ஸ்ரீநகர்: காஷ்மீர் வன்முறை சம்பவங்களுக்கு தீர்வு காண அங்கு பயணம் மேற்கொள்ளும் அனைத்து கட்சி குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த பிரிவினைவாதிகளுக்கு முதல்வர் மெகபூபா முப்தி அழைப்பு விடுத்துள்ளார்.
காஷ்மீரில் தீவிரவாத அமைப்பின் தலைவர் புர்கான்வானி சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து கடந்த ஜுலை 9ம் தேதியில் இருந்து காஷ்மீரில் தொடர்ந்து கலவரம் நடந்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளர்.
காஷ்மீரில் நிலவும் வன்முறை போராட்டங்களுக்கு தீர்வு காணும் வகையில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் அடங்கிய பிரதிநிதிக்குழுவை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
அதன்படி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி.ராஜா, அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அஸாதுதீன் ஒவைஸி, முஸ்லிம் லீக் கட்சியின் இ.அகமது, அதிமுக எம்.பி. பி.வேணுகோபால், திமுக எம்.பி. திருச்சி சிவா உள்பட 28 பேர் மற்றும் அரசு அதிகாரிகள் இன்று காஷ்மீர் செல்ல உள்ளனர்.
இந்த நிலையில், காஷ்மீரில் பயணம் மேற்கொள்ளும் அனைத்துக் கட்சி குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த பிரிவினைவாதிகளுக்கு முதல்வர் மெகபூபா முப்தி அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக காஷ்மீர் மாநில அரசியல் கட்சி தலைவர்களுக்கு மெகபூபா கடிதம் எழுதியுள்ளார். அதில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழுவினருக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், காஷ்மீர் மக்களின் நம்பகத்தன்மை காக்க பேச்சுவார்த்தையில் நீங்கள் இடம் பெற வேண்டும். பேச்சுவார்த்தையில் பங்கேற்பீர்கள் என நம்புகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் மெகபூபா கூறியுள்ளார்.