ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி: சட்டப்பேரவை தலைவராக மெகபூபா தேர்வு !
ஜம்மு: மக்கள் ஜனநாயக கட்சியின் (பி.டி.பி) சட்டப்பேரவை தலைவராக மெகபூபா முப்தி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே, மீண்டும் பி.டி.பி.- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பிடிபி - பாஜக கூட்டணி சார்பில் முதல்வர் பதவி வகித்து வந்த முப்தி முகமது சயீத் கடந்த ஜனவரி மாதம் 7-ந் தேதி காலமானார். இதைத்தொடர்ந்து அம்மாநிலத்தில் புதிய அரசு அமைப்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
பிடிபியைப் பொறுத்தவரையில் ஜம்மு காஷ்மீரில் ஆயுதப் படையினருக்கு அதிகாரம் அளிக்கும் சிறப்பு சட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மத்திய பாஜக அரசு உறுதி தர வேண்டும் என்று நிபந்தனை வைக்கப்பட்டு வந்தது. இதனால் மீண்டும் மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக கூட்டணி ஆட்சி அமைவதில் இழுபறி ஏற்பட்டது. இதையடுத்து அங்கு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சமீபத்தில் மெகபூபா முப்தி சந்தித்து பேசினார். இச்சந்திப்பு சுமார் அரை மணிநேரம் நீடித்தது. இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மெகபூபா முப்தி, பிரதமருடனான சந்திப்பு சாதகமானதாக இருந்தது என்றார். மேலும், தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவை அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதன்படி மெகபூபா முப்தி இன்று ஜம்முவில் தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். அப்போது, கட்சியின் சட்டப்பேரவை தலைவராக மெகபூபா முப்தி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே, மீண்டும் பி.டி.பி.-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.
ஆட்சியமைப்பது தொடர்பாக வெள்ளிக்கிழமை தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி மெகபூபா மற்றும் பா.ஜ.க. மாநில தலைவர் சாத் சர்மா ஆகியோருக்கு கவர்னர் வோரா கடிதம் எழுதியுள்ள நிலையில், சட்டமன்றக் கட்சி தலைவராக மெகபூபா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து நாளை கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும்படி பிடிபி தலைவர்கள் உரிமை கோர உள்ளனர். மெகபூபாவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுக்கும்பட்சத்தில் காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக மெகபூபா முப்தி பொறுப்பேற்கலாம் என தெரிகிறது.