ஜம்மு காஷ்மீர் முதல்வராக உடனே பதவியேற்க மெகபூபா மறுப்பு.. சில நாட்கள் ஜனாதிபதி ஆட்சி அமலாகிறது?
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முதல்வராக இருந்த முப்தி முகமது சயீத் காலமானதைத் தொடர்ந்து அவரது மகள் மெகபூபா முஃப்தி உடனே முதல்வராக மறுப்பு தெரிவித்து வருகிறார். இதனால் அம்மாநிலத்தில் உடனடியாக சில நாட்களுக்கு ஜனாதிபதி ஆட்சி அமலாகக் கூடும் என தெரிகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சி, பா.ஜ.க. இணைந்து கூட்டணி அரசை அமைத்துள்ளன. முதல்வராக மக்கள் ஜனநாயகக் கட்சியின் முப்தி முகமது சயீத் இருந்து வந்தார்.
உடல்நலக் குறைவால் நேற்று அவர் காலமானார். இதனைத் தொடர்ந்து முப்தி முகமது மகளும் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவருமான மெகபூபா முஃப்தி, அம்மாநில முதல்வராக பதவியேற்கக் கூடும் எனக் கூறப்பட்டது.
ஆனால் தமது தந்தையின் இறுதிச் சடங்குகள் அனைத்தும் நாளை மறுநாள்தான் முடிவடையும்; அதுவரை தம்மால் முதல்வராகப் பதவியேற்க முடியாது என மெகபூபா கூறி வருகிறார். இதனால் அம்மாநிலத்தில் ஒரு சில நாட்களுக்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் சூழல் உருவாகி உள்ளது.
இது தொடர்பாக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் ஆளுநர் என்.என் வோராவுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.