ஜம்மு காஷ்மீரில் 144 தடை உத்தரவு.. வீட்டுக்காவலில் ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி
Recommended Video
ஸ்ரீநகர்: பாதுகாப்பு காரணங்களுக்காக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த மாநில முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்ட அரசியல தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மூன்றாக பிரித்து சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும்முடிவில் இருப்பதாக அம்மாநில மக்களிடையே அச்சம் நிலவுகிறது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்துக்கு முன்பாக ஜம்மு காஷ்மீர் பிரிக்கப்படும் என காஷ்மீர் மாநிலம் முழுவதும் காட்டுத்தீ போல் தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில் அம்மாநில அரசியல் கட்சி தலைவர்கள் ஒருவேளை சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தால் மக்களை ஒன்றுதிரட்டி போராடுவோம் என்று கூறிவருகிறார்கள். இந்நிலையில் காஷ்மீரில் மிக அசாதாரண சூழல் நிலவுகிறது. இதையடுத்து அங்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்நிலையில் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி ஆகியோர் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி கிடையாது என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனிடையே ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்பட காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்கள் பலர் ஏற்கனவே வீட்டு காவலில் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செல்லிடப்பேசி, இணையதள சேவை ஆகியவை முற்றிலும் நிறுத்தப்படுள்ளது. ஸ்ரீநகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை மாநிலம் முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளது.