காஷ்மீரில்..அப்பாவிகளை சுட்டு கொல்றாங்க..என்ன பண்றீங்க..மாநில கவர்னருக்கு,மெகபூபா முப்தி குட்டு!
ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லாவேபோராவில் பயங்கரவாதிகள் எனக்கூறி 3 இளைஞர்களை பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை சுட்டுக் கொன்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் அப்பாவிகள் என்றும் இது ஒரு போலி என்கவுண்ட்டர் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த என்கவுண்ட்டர் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஜம்மு-காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹாவுக்கு, முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கடிதம் எழுதி உள்ளார்.
3 இளைஞர்கள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் - பாராமுல்லா தேசிய நெடுஞ்சாலையில் லாவேபோராவில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது பற்றி செவ்வாய்கிழமை பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அந்த வீட்டைச் சுற்றி வளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். சுமார் 17 மணி நேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
போலி என்கவுண்ட்டர்?
இவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த வீட்டிலிருந்து ஒரு ஏ.கே. 47 துப்பாக்கி, 2 பிஸ்டல்கள், வெடிமருந்து உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். இதற்கிடையே துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் அப்பாவிகள் என்றும் இது ஒரு போலி என்கவுண்ட்டர் எனவும் குற்றம் சாட்டப்பட்டது.
அப்பாவிகள்
இவர்கள் யாரும் பயங்கரவாதிகள் இலையென இந்தவர்களின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். இறந்தவர்களில் 22 மற்றும் 17 வயதுடைய 2 மாணவர்கள் மற்றும் 24 வயதான, கட்டுமானத் தொழிலாளி ஆவார். இதில் 2 பேரின் உறவினர்கள் ஜம்மு-காஷ்மீர் போலீசில் பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இறந்தவர்களின் பெயர்கள் தீவிரவாதிகள் பட்டியலில் இல்லை என்று போலீஸ் தரப்பிலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்த சம்பவத்துக்கு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி ஏற்கனவே கண்டனம் தெரிவித்தார். ''ஷோபியான் போலி என்கவுண்ட்டர் பிறகு ஜம்மு-காஷ்மீர் நகரில் உள்ள மற்ற குடும்பங்களும் தங்களது நிரபராதி மகன்கள் சுட்டுக் கொல்லப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும்'' என்று மெகபூபா முப்தி கூறியிருந்தார்.
துணை நிலை கவர்னருக்கு கடிதம்
இந்த நிலையில் இந்த என்கவுன்டர் தொடர்பாக உரிய நவடிக்கை எடுக்கும்படி ஜம்மு-காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹாவுக்கு, மெகபூபா முப்தி கடிதம் எழுதி உள்ளார். லாவ்போராவில் நடந்த போலி என்கவுண்ட்டரில் 3 அப்பாவி இளைஞர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். உயிரிழந்த மூன்று இளைஞர்களின் உடல்களை அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என அந்த கடிதத்தில் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சியும் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.