ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீராகுமார் #MeiraKumar
டெல்லி : ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீரா குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்தை எதிர்த்துப் போட்டியிடப் போகும் வேட்பாளர் குறித்து எதிர்க்கட்சிகள் டெல்லியில் இன்று ஆலோசனை நடத்தின.
இந்த கூட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரும் லோக்சபா முன்னாள் சபாநாயகருமான மீராகுமார் (72)வை பொதுவேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டது. லோக்சபாவின் முதல் பெண் சபாநாயகரான மீராகுமார், முன்னாள் துணை பிரதமர் ஜெகஜீவன் ராமின் மகளாவார்.
ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை 14-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து அப்பதவிக்கான தேர்தல் வரும் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் பாஜக, எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தீவிர ஆலோசனையில் இருந்தன. பத்திரிகைகளும், ஊடகங்களும் ஊகங்களாக எழுதி வந்தன.
பாஜக சார்பில் யார் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறித்து அக்கட்சியின் ஆட்சி மன்றக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடியில் தலைமை யில் நடைபெற்றது.
அதில் பீகார் மாநில ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்தை பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளராக அமித் ஷா அறிவித்தார். இதன்மூலம் ஊடகங்களின் ஊகங்கள் பொய்த்து போயின.
ஆதரவு கோரியது பாஜக
தலித் வேட்பாளரான ராம்நாத்துக்கு ஆதரவு தருமாறு பிரதமர் மோடி அனைத்து கட்சிகளிடமும் கோரிக்கை வைத்தார். அதன்படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பீகார் முதல்வர் நிதீஷ்குமார் உள்ளிட்டோரிடம் கோரிக்கை வைத்தார். அதேபோல் பாஜகவின் மூத்த அமைச்சர்களும் தங்கள் பங்குக்கு சில கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கோரினர்.
பெரும்பாலானாோர் ஆதரவு
இதைத் தொடர்ந்து அதிமுக, தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சி, தெலுங்கானா ராஷ்ட்ரா சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், லோக் ஜனசக்தி, சிவசேனா உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் ராம்நாத்துக்கு ஆதரவு தர ஒப்புக் கொண்டன. ராம்நாத் தலித் சமூகத்தினராக இருந்தாலும் அவர் ஆர்எஸ்எஸ் சிந்தனையாளர் என்று எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்தன.
எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்
ராம்நாத் கோவிந்தை எதிர்த்து போட்டியிட எதிர்க்கட்சிகள் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரையோ அல்லது மீராகுமாரையோ நிறுத்தும் என்று தகவல்கள் வெளியாகின. இதனிடையே ராம்நாத் ஆளுநராக இருந்த போது முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் வேற்றுகிரகவாசிகள் என்று கருத்து தெரிவித்திருந்ததாக தகவல்கள் வெளிவந்தன.
|
இன்று ஆலோசனை
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் இன்று ஒன்று கூடி டெல்லியில் ஆலோசனை நடத்தினர். இதில் இடதுசாரி கட்சிகள், திரிணமூல் காங்கிரஸ், திமுக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பங்கேற்றன. இதன் முடிவில் மீராகுமாரை வேட்பாளராக எதிர்க்கட்சிகள் அறிவித்தன.
தலித் சமூகத்தினர்
தலித் சமூகத்தைச் சேர்ந்த மீராகுமார் (72), முன்னாள் லோக்சபா சபாநாயகர். லோக்சபாவின் முதல் பெண் சபாநாயகர் என்ற பெயரை பெற்றவர். இவர் முன்னாள் துணை பிரதமர் ஜெகஜீவன் ராமின் மகளாவார். இவர் பிறந்த மாநிலம் பீகார் ஆகும்.