அடக்கொடுமையே! தக்காளிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!!
இந்தூர்: மத்தியப்பிரதேசத்தில் உள்ள மார்க்கெட் ஒன்றில் தக்காளி திருட்டை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
பருவமழை பொய்த்துப்போனதால் தாக்காளி விலைச்சல் குறைந்து விட்டது. இதனால் தக்காளியின் விலை கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்துள்ளது. விளைச்சல் இல்லாததால் தக்காளியின் வரத்தும் குறைந்துகொண்டே இருப்பதால், தக்காளியின் விலை நாளுக்கு நாள் விண்ணெய் முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது.
சென்னை கோயம்பேடு மார்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சதமடித்தது தக்காளி விலை. சில்லறை கடைகளில் கிலோ ரூ.120க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. அங்கு தக்காளி கிலோ ரூ 100-ல் இருந்து ரூ.120 வரை விற்கப்படுகிறது.
இதனால் மார்க்கெட்டில் விற்கும் சில வியாபாரிகள் போலீசாரின் தகுந்த பாதுகாப்போடு தக்காளியை விற்பனை செய்கிறார்கள். தக்காளி திருடு போகாமல் தடுப்பதற்காக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சில கடைகளில் தனியார் பாதுகாவலர்களையும் பாதுகாப்பு பணியில் நிறுத்தி உள்ளனர்.
Madhya Pradesh: Men with arms guard tomatoes at Indore vegetable market due to fear of them being stolen as prices soar. pic.twitter.com/czyCAPRcqE
— ANI (@ANI_news) July 22, 2017
இதனிடையே கடந்த 20ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மும்பை தஹிசர் பகுதியில் உள்ள காய்கறி சந்தையில் இருந்து 300 கிலோ தக்காளி திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தக்காளியை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதனால் தக்காளி திருடுபோகாமல் இருக்க அங்கும் துப்பாக்கி ஏந்திய போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.