சிறார் தண்டனை திருத்த சட்டம்: குற்றம் செய்த சிறுவனின் மனநிலையை ஆராய சொல்கிறார் மேனகா காந்தி
டெல்லி: குழந்தைத்தனமாக சிறுவர்கள் செய்யும் குற்றத்துக்கு கடும் தண்டனை தர முடியாது என்றும் சம்பந்தப்பட்ட சிறுவன், பெரியவர் மனநிலையில் குற்றம் செய்துள்ளானா என ஆராய வேண்டும் என்றும் சிறார் நீதிச்சட்டத்திருத்த மசோதாவை ராஜ்யசபாவில் தாக்கல் செய்து பேசிய அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார்.
ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு பலியான மருத்துவ மாணவியின் மரணத்துக்கு காரணமான இளம்குற்றவாளி விடுதலையானதை அடுத்து இளம்சிறார் குற்றவாளிகளின் வயதுவரம்பை பதினெட்டில் இருந்து பதினாறாக குறைக்க வேண்டும் என பலதரப்பில் இருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன.
இதுதொடர்பாக, ஏற்கனவே ஒரு சட்டமசோதா நாடாளுமன்ற லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டு, ராஜ்யசபாவில் அதை நிறைவேற்ற முடியாமல் போனது. தற்போது, பெருகிவரும் நிர்பந்தங்களையடுத்து அந்த பழைய மசோதாவுக்கு உயிர்கொடுத்து நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகின்றது.
குற்றச் செயல்களில் ஈடுபடும் இளம் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனையில் திருத்தம் கொண்டு வரும் வகையிலான மசோதா குறித்த விவாதம் ராஜ்யசபாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி இந்த மசோதாவிற்கு ஆதரவு அளிக்கப்படும் என்று ஏற்கனவே கூறியுள்ளது. தன்னை சந்தித்த நிர்பயாவின் பெற்றோர்களிடமும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி இதனை தெரிவித்தார். இதனால், சிறார் நீதி சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
ராஜ்யசபாவில் மசோதா
இந்த நிலையில், ராஜ்யசபாவில் இந்த மசோதாவை தாக்கல் செய்து அமைச்சர் மேனகா காந்தி பேசினார். அப்போது அவர், குழந்தைத்தனமாக சிறுவர்கள் செய்யும் குற்றத்துக்கு கடும் தண்டனை தர முடியாது என்றும் சம்பந்தப்பட்ட சிறுவன், பெரியவர் மனநிலையில் குற்றம் செய்துள்ளானா என ஆராய வேண்டும் என்றும் சிறுபிள்ளைத் தனமாக சவால் விட்டு குற்றம் செய்யப்பட்டிருந்தால் எப்படிக் கருதுவது என்றும் கூறினார்.
7வயது சிறுமி பலாத்காரம்
அண்மையில் 7 வயது சிறுமி மூன்று சிறுவர்களால் பலாத்காரம் செய்யப்பட்டாள் என்று அவர் கூறியுள்ளார். சிறுமிக்கு 3 சிறுவர்களும் மயக்க பிஸ்கட் கொடுத்து வயல் வெளிக்கு கடத்தி சென்றனர் என்றும் மறைவிடத்தில் சிறுமியை சிறார்கள் 3 நாள் பலாத்காரம் செய்துள்ளதை அவர் சுட்டிக்காட்டி பேசினார். சிறுவர்கள் திட்டமிட்டு செய்துள்ள குற்றத்தை சிறுபிள்ளைதனமாக கருத்தில் கொள்ள முடியாது என்று மேனகா காந்தி கூறியுள்ளார்.
குற்றத்தை ஆராயவேண்டும்
சிறுவர்கள் மீதான குற்றச்சாட்டின் தன்மை பற்றி நீதிமன்றம் தான் முடிவு செய்யும் என்றும் ஒரு சிறுவன் குற்றத்தை திட்டமிட்டு செய்தானா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று கூறிய மேனகா காந்தி, மேலும் குற்றத்தை குழந்தைத்தனமாக செய்தானா என முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேனகா காந்தி விளக்கம்
குற்றத்தின் தன்மையை முடிவு செய்த பிறகே எந்தவகையான தண்டனை என்பது தீர்மானம் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை முறையீடு செய்யவும் திருத்தச்சட்டத்தில் வழி உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். சிறார் நீதிச்சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய மேனகா விளக்கம் அளித்துள்ளார்.
குலாம்நபி ஆசாத்
இந்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், குற்றச்செயல்களில் இளம்வயதினரை அதிகம் ஈடுபடுத்தப்பட வற்புறுத்துகின்றனர். நிர்பயாவின் பெற்றோர், தங்கள் மகளுக்காக மட்டும் போராடவில்லை. இதுபோன்ற குற்றச்செயல்கள் இனிமேல் நடக்காமல் தடுக்கவேண்டும் என்பதே அவர்களது நோக்கம் என்றார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பொருட்டு, தெருக்களில் அதிகளவு விளக்கு வசதிகள் செய்யப்பட வேண்டும் மற்றும் போலீஸ் ரோந்து சோதனை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.